2017-03-08 15:44:00

2016ம் ஆண்டு, குறைந்தது, 90 கோடி மக்கள், இலஞ்சம் கொடுத்தனர்


மார்ச்,08,2017. இலஞ்சம் ஒரு சிறு குற்றமல்ல, ஏனெனில், அது, வறியோரின் உணவு, கல்வி, நலவாழ்வு என்று அனைத்து நிலைகளிலும் பாதிப்புக்களை உருவாக்கி, இறுதியில் அவர்களைக் கொல்கிறது என்று, ஒரு பன்னாட்டு ஆய்வு நிறுவனத்தின் தலைவர், Jose Ugaz அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

Transparency International என்ற ஆய்வு நிறுவனம், ஆசிய பசிபிக் பகுதியில் அமைந்துள்ள 16 நாடுகளில் மேற்கொண்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில், ஊழல், இலஞ்சம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட வேளையில், Ugaz அவர்கள் இவ்வாறு கூறினார்.

ஆசிய பசிபிக் பகுதியில் அமைந்துள்ள நாடுகளில், இந்தியாவும், வியட்நாமும் ஊழல் மிக அதிகமான நாடுகள் என்றும், ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், மற்றும் ஆஸ்திரேலியா ஊழல் குறைந்த நாடுகள் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 20,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பின் அடிப்படையில், Transparency International என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள இவ்வறிக்கையின்படி, 2016ம் ஆண்டு, குறைந்தது, 90 கோடி மக்கள், இலஞ்சம் வழங்கியுள்ளனர் என்பது தெரியவருகிறது.

இந்தியா, தாய்லாந்து, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில், ஏழைகளிடம் மிக அதிக அளவு இலஞ்சம் வசூலிக்கப்பட்டதென்றும், வியட்நாம், மியான்மார், கம்போடியா ஆகிய நாடுகளில் செல்வந்தர்கள் அதிகமாக இலஞ்சம் வழங்கினர் என்றும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தென் கொரிய அரசுத் தலைவர் Park Geun-hye அவர்களும், மலேசியப் பிரதமர், Najib Razak அவர்களும், சீனாவின் பல்வேறு உயர்மட்டத் தலைவர்களும், இலஞ்சம், ஊழல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டுள்ளது குறித்தும் Transparency International வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.