2017-03-08 15:36:00

கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருமளவு கூடியுள்ளன


மார்ச்,08,2017. மனிதர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான, மத உரிமையைக் காப்பதற்கு பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அண்மைய ஆண்டுகளில் இவ்வுரிமை பெரிதும் ஒடுக்கப்பட்டு வருகிறது என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. அவை கூட்டங்களில், திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்பதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், மத உரிமையை மையப்படுத்தி, இச்செவ்வாயன்று மேற்கொள்ளப்பட்ட ஒரு கலந்துரையாடலில், இவ்வாறு கூறினார்.

மத நம்பிக்கை, சமுதாய, மற்றும் அரசியல் தளங்களில் பாதிப்புக்களை உருவாக்கிவரும் இன்றையச் சூழலில், ஒருவர் தன் மனதில் கொண்டிருக்கும் மத நம்பிக்கைக்கும், அதன் வெளிப்புற செயல்பாடுகளுக்கும் மோதல்கள் எழுவது அதிகரித்துள்ளது என்று, பேராயர் Jurkovič அவர்கள், கவலை வெளியிட்டார்.

உலகெங்கும் பொதுவாக, மத நம்பிக்கை கொண்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், இவர்களில், கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் வன்முறைகள் பெருமளவு கூடிவருவதும், இந்த வன்முறைகள் குறித்து, உலக சமுதாயம் அக்கறையின்றி இருப்பதும், வருத்தமளிக்கின்றன என்று, பேராயர் Jurkovič அவர்கள், சுட்டிக்காட்டினார்.

21ம் நூற்றாண்டில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் துன்பங்கள், முதல் நூற்றாண்டில் அவர்கள் எதிர்கொண்ட துன்பங்களையும் விட அதிகமாக உள்ளன என்று எடுத்துரைத்த பேராயர் Jurkovič அவர்கள், அனைத்து அரசுகளும், மத உரிமையை, ஓர் அடிப்படை உரிமையென்று உறுதி செய்வது ஒன்றே, மதத்திற்கு எதிரான வன்முறைகளை நிறுத்தும் ஒரே வழி என்று கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.