2017-03-10 15:18:00

புலம்பெயர்ந்தோர்க்கு கதவுகளை மூட வேண்டாம்


மார்ச்,10,2017. புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்வோர்க்கு வழங்கப்படும் உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டுமென்று, வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும், ஏனைய நாடுகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர், திருஅவையின் இரு முக்கிய தலைவர்கள்.

லெபனான், ஜோர்டன், ஈராக், கிரேக்கம் ஆகிய நாடுகளின் புலம்பெயர்ந்தோர் முகாம்களில் வாழ்கின்ற மக்களைப் பார்வையிட்ட பின்னர், இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் பேசிய, அமெரிக்க கர்தினால் ரோஜெர் மகோனி, பேராயர் சில்வானோ தொமாசி ஆகிய இருவரும், தங்களின் வாழ்வுக்காக, நாடுகளின் கதவுகளைத் தட்டும் மக்களுக்குரிய உதவிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறினர்.

திருப்பீட ஒருங்கிணைந்த மனித முன்னேற்ற அவையின், புலம்பெயர்ந்தோர் மற்றும், குடிபெயர்வோர் அலுவலகம் ஏற்பாடு செய்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய இத்தலைவர்கள், மனித சமுதாயம் மிக மோசமான நிலையில் வாழ்வதைக் காண முடிந்தது எனத் தெரிவித்தனர்.

இம்முகாம்களில் வாழ்கின்ற மக்களுடன் திருத்தந்தை கொண்டிருக்கும் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்ததாகவும், குடியேற்றதாரர் குறித்து அமெரிக்க அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள் எடுத்திருக்கும் தீர்மானம், இம்மக்களை மேலும் பாதிக்கும் எனவும் கூறினார், கர்தினால் ரோஜர் மகோனி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.