2017-03-11 14:53:00

அனைவருக்கும் மருந்துகள் கிடைக்க வழிசெய்வது நன்னெறி கடமை


மார்ச்,11,2017. உலகில் அனைவருக்கும் மருந்துகள் கிடைப்பதற்கு வழியமைத்துக் கொடுப்பதற்கு, நன்னெறி முறையிலான கடமை உள்ளது என்று, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், ஐ.நா. மனித உரிமைகள் அவையில் கூறினார்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா. அலுவலகங்கள் மற்றும், பன்னாட்டு நிறுவனங்களுக்கு, திருப்பீடத்தின் பிரதிநிதியாகப் பணியாற்றும் பேராயர் Ivan Jurkovič அவர்கள், ஜெனீவாவில், ஐ.நா. மனித உரிமைகள் அவைக் கூட்டத்தில் உரையாற்றுகையில், இவ்வாறு கூறினார்.

உலகில், அனைவருக்கும் மருந்துகள் கிடைப்பதற்குரிய இலக்கை எட்டுவதற்கு, ஒத்திணங்கிச் செல்லும் கொள்கைகள் அவசியம் என்றும், உரையாற்றிய பேராயர் Jurkovič அவர்கள், புதிய மருத்துவ கண்டுபிடிப்புகளும், மருந்துகளும் எல்லாருக்கும் கிடைப்பதற்கும், இத்தகைய கொள்கைகள் இன்றியமையாதவை என்றும் தெரிவித்தார்.

மனித மாண்பையும், மனித உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகளையும் ஊக்குவிப்பதற்கு, ஏற்றுக்கொள்ள முடியாத மனிதப் பேராசைகள் உட்பட, அனைத்துத் தடைகளும், துணிச்சலுடன் அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினார், பேராயர் Jurkovič.

கடந்த பிப்ரவரி 27ம் தேதி தொடங்கிய ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 34வது கூட்டம், மார்ச் 24ம் தேதி வரை நடைபெறுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.