2017-03-16 15:29:00

திருத்தந்தையைச் சந்தித்த லெபனான் நாட்டு அரசுத்தலைவர்


மார்ச்,16,2017. லெபனான் நாட்டின் அரசுத்தலைவர், Michel Aoun, மற்றும் அவரது துணைவியார், அரசு அதிகாரிகள் ஆகியோர், மார்ச் 16, இவ்வியாழன் காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தனர்.

லெபனானுக்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் உறவுகள் குறித்தும், பன்முகக் கலாச்சாரங்களையும், மதங்களையும் கொண்டுள்ள லெபனான் நாட்டில், அனைத்து இனத்தவருக்கிடையிலும் ஒருங்கிணைப்பும், கூட்டுறவும் நிலவுவது நாட்டின் எதிர்காலத்திற்குச் சிறந்தது என்றும், இச்சந்திப்பில் பேசப்பட்டதென, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

சிரியாவின் தற்போதைய நிலை குறித்தும், பொதுவாக மத்தியக் கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழும் வன்முறைகள் குறித்தும், இச்சந்திப்பில் பேசப்பட்ட வேளையில், புலம்பெயர்ந்தோருக்கு லெபனான் நாடு ஆற்றிவரும் தொண்டுகள் குறித்து, திருப்பீடம் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுத்தலைவர், Michel Aoun அவர்கள், திருத்தந்தையைச் சந்தித்தபின், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் துறையின் தலைவர், பேராயர் பால் காலகர் அவர்களையும் சந்தித்துப் பேசினார்.

மேலும், தங்கள் 'அத் லிமினா' சந்திப்பிற்கென உரோம் நகருக்கு வருகை தந்திருக்கும், கனடா நாட்டு ஆயர்களின் ஒரு குழுவினரை, இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.