2017-03-16 16:26:00

திருப்பீடத்தின் நிதி உதவியால் இல்லம் திரும்பியவர்கள்


மார்ச்,16,2017. திருப்பீடம் வழங்கிய 8 கோடி மத்திய ஆப்ரிக்க பிராங்க், அதாவது, 1,31,000 டாலர்கள் மதிப்புள்ள நிதி உதவியின் பயனாக, மத்திய ஆப்ரிக்க நாட்டில், 968 பேர் மீண்டும் தங்கள் இல்லங்களுக்கு திரும்பி, புது வாழ்வைத் துவக்கியுள்ளனர் என்று, பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மத்திய ஆப்ரிக்க காரித்தாஸ் வழியே அனுப்பியுள்ள இந்த உதவித் தொகையால், 371 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், பாங்கியில் உள்ள 23ம் ஜான் மையத்தை அடைந்துள்ளனர் என்று இச்செய்தி மேலும் கூறுகிறது.

மத்திய ஆப்ரிக்காவில் தங்கள் இல்லங்களையும், உடமைகளையும் இழந்து வெளியேறிய மக்கள், 2016ம் ஆண்டு மார்ச் மாதம், 138,415 என்ற எண்ணிக்கையில் இருந்ததாகவும், திருப்பீடம் மற்றும் ஏனைய பிறரன்பு அமைப்பினரின் உதவிகளால், இந்த எண்ணிக்கை இவ்வாண்டு பிப்ரவரி மாதம், 127,933 என குறைந்துள்ளது என்றும் பீதேஸ் செய்தி சுட்டிக்காட்டுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.