2017-03-17 15:52:00

திருத்தந்தை, லெபனானுக்கு பயணம் மேற்கொள்ள விருப்பம்


மார்ச்,17,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு விருப்பம் தெரிவித்தார் என, லெபனான் அரசுத்தலைவர், Michel Aoun அவர்கள், இவ்வியாழனன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

மார்ச் 16, இவ்வியாழன் காலையில், தனது துணைவியார், மற்றும் அரசு அதிகாரிகளுடன் திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்தபின், செய்தியாளர்களிடம் பேசிய அரசுத்தலைவர் Michel Aoun அவர்கள், இவ்வாறு தெரிவித்தார் என, ஆசியச் செய்தி கூறுகிறது.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், லெபனான் நாட்டிற்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வது முக்கியத்துவம் நிறைந்ததாய் இருக்குமென்று உரைத்த லெபனான் அரசுத்தலைவர் Michel Aoun அவர்கள், கிறிஸ்தவத்திற்கும், இஸ்லாம் மதத்திற்கும்  தொட்டிலாக உள்ள பகுதியில், கீழை வழிபாட்டுமுறை கிறிஸ்தவர்கள் கடினமான சூழல்களில் வாழ்கின்றனர் என்று கூறினார்.

இதற்கிடையே, உலகில் வேகமாக வளரும் மதம் இஸ்லாம் என்று, அமெரிக்காவை மையமாகக்கொண்ட Pew ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது. 2050ம் ஆண்டில் இந்தியாவே முஸ்லிம்கள் அதிகம் வாழும் நாடாக இருக்கலாம் எனவும் அவ்வறிக்கை கூறுவதாக, பிபிசி செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.