2017-03-17 15:56:00

புலம்பெயர்ந்தவர்கள் குறித்த EU நடவடிக்கை பற்றி கவலை


மார்ச்,17,2017. புலம்பெயர்ந்த மக்கள், துருக்கியிலிருந்து, EU என்ற ஐரோப்பிய ஒன்றிய அவை நாடுகளுக்குள் வருவதைத் தடை செய்வதற்கு, 2016ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை, ஐரோப்பிய ஆயர்களின் பிறரன்பு அமைப்பான காரித்தாஸ் குறை கூறியுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஏற்பட்டு, மார்ச் 16, இவ்வியாழக்கிழமையோடு, ஓராண்டு நிறைவுற்றதை முன்னிட்டு அறிக்கை வெளியிட்டுள்ள, ஐரோப்பிய காரித்தாஸ் அமைப்பு, ஐரோப்பிய ஒன்றிய அவையின் இந்நடவடிக்கை, வெட்கத்துக்குரியது என குறை கூறியுள்ளது.

இந்நடவடிக்கையால், கிரேக்கத்தில், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்கள், மனிதமற்ற மற்றும், மாண்பிழந்த நிலையில் வாழ்வதற்கு உள்ளாகியுள்ளனர் என்றும், இம்மக்கள், EU நாடுகளில் புகலிடம் தேடுவதற்கு, வேறு அதிக ஆபத்தான வழிகளைக் கட்டாயமாக தேர்ந்து கொள்வதற்கு இது வழியமைக்கும் என்றும், ஐரோப்பிய காரித்தாசின் அறிக்கை கூறுகிறது.

புலம்பெயர்ந்த மக்களைத் தண்டிக்கும் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டுமெனவும், துருக்கியோடு இடம்பெற்றுள்ள ஒப்பந்தம், புலம்பெயர்ந்தவர் பிரச்சனைக்குத் தீர்வாகாது எனவும், கூறியுள்ளார், ஐரோப்பிய காரித்தாசின் பொதுச் செயலர் Jorge Nuño Mayer. 

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.