2017-03-17 15:37:00

பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் சகித்துக்கொள்வது...


மார்ச்,17,2017. நியு யார்க் ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்றுவரும் பெண்கள் பற்றிய 61வது அமர்வுக்கு ஊக்கமளிக்கும் வகையில், ILO என்ற உலக தொழில் நிறுவனம் நடத்திய கூட்டத்தில், பணியிடங்களில், பாலினத்தை அடிப்படையாக வைத்து இடம்பெறும் வன்முறைகள் களையப்பட வேண்டுமென அழைப்பு விடுக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா. பெண்கள் அமைப்பின் இயக்குனர் Phumzile Mlambo-Ngcuka அவர்கள், பணியிடங்களில் இடம்பெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைச் சகித்துக்கொள்வது, வேலை வழங்கும் முதலாளிகளுக்கு, பல வழிகளில் இழப்பைக் கொணரும் என எச்சரித்தார்.

உற்பத்தி இழப்பு, சட்டமுறையான செலவுகள், நோய் விடுப்புகள், நிறுவனத்தின் பெயர் கெடுதல் உட்பட, பெருமளவில் இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறுத்தப்பட நடவடிக்கை எடுக்குமாறு, தொழில் நிறுவனத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார், Phumzile.

பணியிடங்களில், பெண்கள் எதிர்நோக்கும் வன்முறைகளை அகற்றுவதற்கென, 2019 அல்லது 2020ம் ஆண்டில், புதிய உலகளாவிய விதிமுறைகளை வெளியிடுவதற்கு, ILO நிறுவனம் முயற்சித்து வருகின்றதெனத் தெரிவித்தார், Phumzile.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.