2017-03-20 16:25:00

பாத்திமா நாகரில் திருத்தந்தையின் பயணத் திட்டங்கள்


மார்ச்,20,2017. போர்த்துக்கல்லின் பாத்திமாவில் அன்னை மரியா காட்சியளித்ததன் 100ம் ஆண்டு சிறப்புக் கொண்டாட்டங்களையொட்டி, மே மாதத்தில் அத்திருத்தலத்திற்கு திருத்தந்தை திருப்பயணம் மேற்கொள்வது குறித்த முழு விவரங்களை இத்திங்களன்று வெளியிட்டது திருப்பீடம்.

மே மாதம் 12ம் தேதி வெள்ளியன்று பிற்பகல் 2 மணிக்கு உரோம் நகரிலிருந்து புறப்படும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாலை 4 மணி 20 நிமிடங்களுக்கு Monte Real விமான தளத்தை அடைந்து, அங்கேயே போர்த்துக்கல் அரசுத் தலைவரை சந்தித்து உரையாடுவார். பின், அங்குள்ள சிறிய கோவிலை தரிசித்தபின், ஹெலிகாப்டர் வழியாக பாத்திமா நகர் சென்று, அன்னை மரியா காட்சி கொடுத்த திருத்தலத்தைச் சந்தித்து செபித்தபின், அனைவருக்கும் ஆசீர் அளிப்பார். அன்றிரவு செபமாலை வழிபாட்டிலும் கலந்துகொள்வார்.

13ம் தேதி சனிக்கிழமையன்று போர்த்துக்கல் பிரதமரைச் சந்தித்து உரையாடியபின், ஜெபமாலையின் நமதன்னை பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி, நோயுற்றோரை அசீர்வதிப்பார். போர்த்துக்கல் நாட்டு ஆயர்களுடன் மதிய உணவருந்தியபின், உள்ளூர் நேரம் பிற்பகல் 3 மணிக்கு உரோம் நோக்கி பயணம் மேற்கொள்வார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.