மார்ச்,21,2017. இந்தியாவில், ஒவ்வோர் ஆண்டும், ஆகஸ்ட் முதல் ஞாயிறை, தேசிய கத்தோலிக்க இளையோர் நாளாகச் சிறப்பிக்குமாறு கூறியுள்ளது, இந்திய ஆயர் பேரவையின் இளையோர் பணிக் குழு.
இந்திய இளம் கத்தோலிக்கரை ஒன்றிணைக்கவும், நற்செய்திக்குச் சான்று பகரவும் ஊக்குவிக்கும் நோக்கத்தில், மறைமாவட்ட அளவில், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் முதல் ஞாயிறன்று, இளையோர் நாள் சிறப்பிக்கப்படும் என, இப்பணிக் குழு அறிவித்துள்ளது.
பல்வேறு மறைமாவட்டங்களிலுள்ள இளையோரின் ஆன்மீக வளர்ச்சிக்கு உதவும் வகையில், இந்த இளையோர் நாள் கடைப்பிடிக்கப்படுவதாகவும், மறைமாவட்ட அளவில், இளையோர்க்குப் பொறுப்பான தலைவர்களுக்கு, இவ்வாண்டில் நடைபெறும் பயிற்சிப் பாசறைகள், 2018ம் ஆண்டிலும் தொடர்ந்து நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மறைமாவட்டத்திலும், கத்தோலிக்க இளையோர் இயக்கம் தொடங்கப்பட்டு, அது, தல ஆயர் மற்றும், இந்திய ஆயர் பேரவையின் இளையோர் பணிக் குழுவின் கண்காணிப்பில் செயல்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், வருகிற ஜூலை 30ம் தேதி முதல், ஆகஸ்ட் 9ம் தேதி வரை, இந்தோனேசியாவின் யோககார்த்தா நகரில் நடைபெறும், 7வது ஆசிய இளையோர் நாள் நிகழ்வுகளில், 29 நாடுகளின் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என, ஊடகச் செய்தி கூறுகிறது.
ஆதாரம் : Fides /வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |