2017-03-25 14:52:00

தவக்காலம் 4ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


தவக்காலத்தின் 4ம் ஞாயிறு, Laetare Sunday - அதாவது, 'மகிழும் ஞாயிறு' என்று அழைக்கப்படுகிறது. நாம் வாழ்வில் மகிழ்வடைய, பல நூறு காரணங்கள் இருக்கும். அவற்றில், மிக முக்கியமான ஒரு காரணம் - நாம் மன்னிப்பு பெற்ற, மன்னிப்பு வழங்கிய அனுபவங்கள். இந்த மகிழும் ஞாயிறைக் கொண்டாடுவதற்கு, தகுந்ததொரு முன்னேற்பாடாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2014ம் ஆண்டு, 'மன்னிப்பு விழா'வை உருவாக்கினார். "வெள்ளி, சனி ஆகிய இரு நாட்களில், 'ஆண்டவருக்கென 24 மணி நேரத்'தை ஒதுக்கி, நாம் அதை 'மன்னிப்பின் விழா' என்று கொண்டாடுவோம்" என்று திருத்தந்தை அவர்கள் விடுத்த ஓர் அழைப்பு, திருஅவையில், மன்னிப்பு விழாவை உருவாக்கியது. கடந்த மூன்று ஆண்டுகளாக, தவக்காலத்தின் 4ம் ஞாயிறுக்கு முந்தைய இரு நாள்கள், இந்த மன்னிப்பு விழா கொண்டாடப்படுகிறது. உலகெங்கும் உள்ள பல கோவில்கள் 24 மணி நேரங்கள் திறக்கப்பட்டு, அங்கு, ஒப்புரவு அருளடையாளம் வழங்க அருள்பணியாளர்கள் காத்திருப்பது, இந்த மன்னிப்பு விழாவின் முக்கிய அம்சமாக இருந்துவருகிறது.

இவ்வாண்டு, மார்ச் 24,25 ஆகிய இரு நாட்கள் நாம் கொண்டாடிய இந்த மன்னிப்பு விழாவிற்கு, வழங்கப்பட்ட மையக்கருத்து, "நான் இரக்கத்தையே விரும்புகிறேன்" (மத். 9:13). நாம் கொண்டாடிய இந்த மன்னிப்பு விழாவைத் தொடர்ந்துவரும் மகிழும் ஞாயிறன்று, பார்வையற்ற ஒருவரை இயேசு குணப்படுத்தும் நிகழ்வு, நற்செய்தியாக (யோவான் 9: 1-41) நமக்குத் தரப்பட்டுள்ளது. 'மன்னிப்பையும்' ‘பார்வை பெறுவதை'யும் இணைத்துச் சிந்திக்க, மகிழும் ஞாயிறு நம்மை அழைக்கிறது.

2012ம் ஆண்டு நடைபெற்ற பெர்லின் திரைப்பட விழாவில், Rebelle அதாவது, 'புரட்சியாளர்' என்ற பிரெஞ்ச் மொழித் திரைப்படத்தில் நடித்த Rachel Mwanza என்ற 17 வயது இளம்பெண், சிறந்த நடிகர் என்ற விருது பெற்றார். விருது பெற்ற இளம் பெண் இரேச்சல், நமது ஞாயிறு சிந்தனையின் மையமாகிறார். இவ்விளம் பெண்ணின் வாழ்வில், 'மன்னிப்பும்' 'பார்வை பெறுதலும்' இணைந்திருப்பதால், இப்பெண் நம் சிந்தனைகளின் மையமாகிறார்.

ஆப்ரிக்காவின் காங்கோ குடியரசில், ஓர் எளியக் குடும்பத்தில், கடைசிக் குழந்தையாகப் பிறந்தவர், இரேச்சல். அவருக்கு 8 வயதானபோது, வாழ்க்கை முற்றிலும் மாறியது. இரேச்சலின் தந்தை, தன் மனைவியையும், மூன்று குழந்தைகளையும், அவர்கள் பிறந்து வளர்ந்த ஊரிலிருந்து, Kinshasa நகருக்கு அனுப்பிவைத்தார். விரைவில் அவர்களுடன் தானும் சேர்வதாகக் கூறியத் தந்தை, அத்துடன் அவர்கள் வாழ்விலிருந்து முற்றிலும் மறைந்தார். Kinshasaவில் அத்தாயும், குழந்தைகளும், வயதான தங்கள் பாட்டியோடு அடுக்கடுக்காய் துன்பங்களைச் சந்தித்தனர்.

அக்குடும்பத்தின் துன்பங்களுக்கு, கடைசியாகப் பிறந்த இரேச்சல்தான் காரணம் என்று, அந்நகரில் இருந்த ஒரு 'போலிச்சாமியார்' கூறினார். அக்குழந்தை ஒரு சூனியக்காரி என்றும், அவரைப் பிடித்துள்ள பேயை ஓட்டிவிட்டால் எல்லாம் சரியாகிவிடும் என்றும் கூறினார். இரேச்சலின் பாட்டி, குழந்தைப் பருவத்திலிருந்தே இரேச்சலை வெறுத்தவர். எனவே, போலிச்சாமியார் இவ்விதம் சொன்னதும், பேய்பிடித்த அக்குழந்தையைத் தண்டிக்க, பாட்டி, சிறுமியின் கண்களில் மிளகாய்ப் பொடியைப் போட்டுத் தேய்த்தார். அப்போது இரேச்சலுக்கு வயது பத்து. இதைத் தொடர்ந்து, இரேச்சல் தன் வீட்டைவிட்டு ஓடிவிட்டார்.

அடுத்த 7 ஆண்டுகள், இளம்பெண் இரேச்சல், வெளி உலகில் சந்தித்த துன்பங்களை இக்கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார். தன் துன்பங்களைக் கேட்டு மக்கள் கண்ணீர் விடவேண்டும் என்பது தன் நோக்கமல்ல, மாறாக, இத்தகையத் துன்பங்களைச் சந்திக்கும் ஏனைய ஆப்ரிக்கக் குழந்தைகளின் வாழ்வில் மாற்றங்களைக் கொணர்வதற்காகவே, தன் வாழ்வின் துயரங்களை, உலகின் பல அரங்குகளில், தான் பேசி வருவதாக இரேச்சல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரையின் இறுதியில், கூறப்பட்டுள்ள அற்புத வரிகளே, இளம்பெண் இரேச்சலை நம் சிந்தனைகளின் மையமாக்கியுள்ளன. அந்த இறுதி வரிகள் இதோ: "இரேச்சலின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த பாட்டியின்மீது அவர் கோபமாய் இருக்கிறாரா என்று கேட்டபோது, அவர், ‘நான் ஏன் கோபப்படவேண்டும்? அதனால் என்ன பயன்?’ என்று பதில் சொன்னார். இத்தகைய உன்னதமான சிந்தனைக்கு முன் நாம் மிகச் சிறியவர்களாகிறோம்" என்ற வார்த்தைகளுடன் இக்கட்டுரை நிறைவு பெறுகிறது.

இரேச்சல் அவர்களின் வாழ்வை முற்றிலும் புரட்டிப்போட்டு, அவரை வீதிக்குக் கொணர்ந்தது - பாட்டி அவர் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தேய்த்த அந்தக் கொடூரம். அந்நிகழ்வால், அக்குழந்தை, தன் கண் பார்வையையே இழந்திருக்க வாய்ப்புக்கள் இருந்தன. கண்பார்வையை இழக்காமல் அவரைக் காத்த இறைவனுக்கு நன்றி கூறுவோம். அதைவிட மேலாக, அந்நிகழ்வோ, அதைத் தொடர்ந்த துன்பங்களோ, அந்த இளம்பெண்ணின் மனக் கண்களைக் குருடாக்கி, அவரை வெறுப்பில் புதைந்துபோகச் செய்யாமல் காத்ததற்காக, இறைவனுக்கு, சிறப்பான நன்றியைக் கூறுவோம். 'மன்னிப்பும்' 'பார்வை பெறுதலும்' ஒன்றோடொன்று பிணைந்தது என்பதை, இரேச்சல் அவர்களின் வாழ்க்கை தெளிவாகக் காட்டுகிறது.

'மன்னிப்பு' 'பார்வை பெறுதல்' என்ற இவ்விரு வார்த்தைகளையும் இணைத்து, இணையத்தளத்தில் தேடினால், நாம் காணும் பல முதல் தகவல்கள், மதத் தொடர்புடைய தகவல்களாகவே உள்ளன. மன்னிப்பதால், அகக்கண்கள் திறந்து, ஆண்டவனைக் காணமுடியும் என்று, அனைத்து உண்மையான மதங்களும் சொல்லித்தருகின்றன. 'கண்ணுக்குக் கண்' என்ற பழிவாங்கும் பாடங்களைச் சொல்லித்தரும் இவ்வுலகப் போக்கு, நம் அனைவரையும் பார்வை இழக்கச்செய்கிறது. 'பழிக்குப் பழி' என்ற உணர்வால் நாம் எவ்வளவுதூரம் பார்வை இழக்கமுடியும் என்பதைக் கூறும் ஒரு நிகழ்வு சில ஆண்டுகளுக்கு முன், ஈரான் நாட்டில் நிகழ்ந்தது.

இரேச்சலின் கண்களில் அவரது பாட்டி மிளகாய்ப் பொடியைத் தேய்த்த ஆண்டு 2004. அதே ஆண்டு, ஈரானில், தன் காதலை நிராகரித்த அமேனே (Ameneh Bahrami) என்ற இளம்பெண்ணின் முகத்தில் அமிலம் வீசினார் மஜீத் (Majid Movahedi) என்ற இளைஞர். இதனால், இளம்பெண் அமேனேயின் முகமெல்லாம் எரிந்துபோய், இடது கண்ணில் அவர் பார்வை இழந்தார். 2011ம் ஆண்டு, இந்த வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு, உலகை அதிர்ச்சியடையச் செய்தது. அமில வீச்சினால் இடது கண்ணில் பார்வையை இழந்த இளம்பெண் அமேனே போலவே, மஜீத்தின் இடது கண்ணிலும் அமிலம் ஊற்றப்பட்டு, அவரும் பார்வை இழக்கவேண்டும் என்பதே அத்தீர்ப்பு. நீதிமன்றத்தின் இத்தீர்ப்புக்கு இளம்பெண் அமேனே முதலில் துணைபோனார் என்பது உண்மை.

இத்தீர்ப்பை செயல்படுத்தக்க்கூடாது என்று உலகின் பல மனிதாபிமான அமைப்புக்கள் விண்ணப்பித்தாலும், ஈரான் சிறை அதிகாரிகள், 2011ம் ஆண்டு மேமாதம் ஒரு நாள், இத்தீர்ப்பை நிறைவேற்ற, மஜீத்துக்கு மயக்க மருந்தை முதலில் கொடுத்தனர். அவர் மயக்கத்தில் இருந்த நேரம், அமில வீச்சில் கண்ணிழந்த இளம்பெண் அமேனே அவர்கள், அத்தண்டனையை நிறைவேற்ற வேண்டாம் என்று விண்ணப்பித்ததால், மஜீத்தின் கண்களில் அமிலம் ஊற்றப்படவில்லை. இளம்பெண் அமேனே அவர்களின் அகக் கண்கள் திறந்ததால், மஜீத்தின் கண்கள் காப்பாற்றப்பட்டன.

'கண்ணுக்கு கண்' என்று வாழும் இவ்வுலகப் போக்கிற்கு மாற்றுச் சாட்சியங்களாக இரேச்சல், அமேனே போன்ற இளம்பெண்கள் 'மன்னிப்பு' பாடங்களைச் சொல்லித் தருவதால், இவ்வுலகம் இன்னும் முழுமையாகக் குருடாகாமல் வாழ்கிறது. உடலில் உள்ள கண்களில் வேதனையை அனுபவித்தாலும், ஊனக் கண்களின் பார்வையை இழந்தாலும், அகக் கண்களால் அற்புதமான உண்மைகளைக் காணமுடியும் என்பதைச் இரேச்சல், அமேனே என்ற இவ்விரு இளம்பெண்களும் நமக்குச் சொல்லித்தருகின்றனர்.

இதேபோல், இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் பார்வை இழந்த மனிதரும், உடலில் மட்டும் பார்வை பெறாமல், உள்ளத்திலும் பார்வை பெறுவதைக் காண்கிறோம். இயேசு, பார்வை இழந்தவரை குணமாக்கியப் புதுமை, யோவான் நற்செய்தி 9ம் பிரிவில் முதல் ஏழு இறைச்சொற்றொடர்களில் முடிவடைகிறது. ஆனால், இப்புதுமையைத் தொடர்ந்து 34 இறைச்சொற்றொடர்களில் வழியாக நற்செய்தியாளர் யோவான், ஓர் இறையியல் பாடத்தை நடத்துகிறார். நாம் அனைவரும் அகம், புறம் இவற்றில் பார்வை பெறுவது, பார்வை இழப்பது என்பன குறித்த பாடங்கள் இவை.

பார்வை இழந்த மனிதர், உடலளவில் மட்டுமல்லாமல், உள்ளத்திலும் பார்வை பெறுகிறார். தன் விசுவாசக் கண்களால் இயேசுவைக் கண்டுகொள்கிறார். இதற்கு நேர் மாறாக, உடலளவில் தெளிவான பார்வை கொண்டிருந்ததாக எண்ணிக்கொண்டிருந்த பரிசேயர்கள், படிப்படியாகத் தங்கள் அகத்தில் பார்வை இழப்பதையும், யோவான் கூறியுள்ளார். இவ்விரு துருவங்களுக்கும் இடையே, பார்வை பெற்ற மனிதரின் பெற்றோர், அரைகுறையாய் பெறும் பார்வையைக் குறித்தும், யோவான் பாடங்கள் சொல்லித் தருகிறார்.

இயேசு உமிழ் நீரால் சேறு உண்டாக்கி, பார்வையற்றவர் கண்களில் பூசினார். சிலோவாம் குளத்தில் கண்களைக் கழுவச் சொன்னார். அவரும் போய் கழுவினார். பார்வை பெற்றார். பார்வை பெற்ற மகிழ்வோடு அவர் தன் வழியே போயிருந்தால், புதுமை முடிந்திருக்கும், சுபம் போட்டிருக்கலாம். புகழை விரும்பாத இயேசுவுக்கும் அது மிகவும் பிடித்த செயலாக இருந்திருக்கும். பார்வை பெற்றவர் திரும்பி வந்ததால், பிரச்சனைகள் ஆரம்பமாயின.

பார்வை பெற்றவர் கோவில் வாசலில் அமர்ந்து பிச்சை எடுத்தவர். அவர் திரும்பி வந்தபின், பெரியதொரு பிரச்சனையில் சிக்கிக்கொள்வோம் என்று கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். புதுமை நடந்தது ஓர் ஒய்வு நாள் என்பதுதான் பிரச்சனை. மலைபோல் குவிந்திருந்த பல பிரச்சனைகள் நடுவே தினமும் வாழ்ந்தவர்கள், அந்தப் பிச்சைக்காரர்கள். அவர்களுக்கு, நல்ல நாள், பெரிய நாள், ஒய்வு நாள் என்ற பாகுபாடுகள் எல்லாம் இருந்ததில்லை. இத்தகையப் பாகுபாடுகளால் தங்கள் பார்வையைக் குறுக்கிக் கொண்டவர்கள், பரிசேயர்கள். 'ஓய்வுநாள்' என்பது, இறைவன் தந்த கொடை என்பதை மறந்து, அதை ஒரு பிரச்சனையாக்கிய, பரிசேயர்கள், பார்வை பெற்றவரை கேள்விகளால் துளைத்தனர்.

பார்வை பெற்றவர் தன் ஊனக் கண்களால் இயேசுவை இன்னும் பார்க்கவில்லை, ஆனால், அகக் கண்களால் பார்க்க ஆரம்பித்துவிட்டார். எனவே, பரிசேயர்கள் கேட்ட கேள்விகள் அவரை பயமுறுத்தவில்லை. அகக்கண்களால் தான் கண்ட இயேசுவைப்பற்றி அச்சமின்றி அறிக்கையிட்டார். தங்களை எதிர்க்கத் துணிந்த அந்தப் பிச்சைக்காரரின் பெற்றோரை அழைத்து, அவர்களையும் கேள்விகளால் வாட்டியெடுத்தனர் பரிசேயர்கள்.

தங்கள் மகன் பார்வையற்றிருந்தபோது, அதை இறைவனின் சித்தம் என்று ஏற்றுக்கொண்ட அந்த பெற்றோர், பார்வை பெற்று, இறைவனின் புதுமைக்கு ஒரு சாட்சியாக நின்ற தங்கள் மகனை ஏற்றுக்கொள்வதற்குத் தயங்கினர். பரிசேயரின் சட்ட திட்டங்கள், அவ்வளவு தூரம், அவர்களைப் பயமுறுத்தி, பார்வை இழக்கச் செய்திருந்தது. பிறந்தது முதல், தன் பெற்றோரையோ, பரிசேயர்களையோ பார்த்திராத அம்மனிதர், அன்று, முதல் முறையாக, தன் பெற்றோரையும், பரிசேயரையும் பார்க்கிறார். தன் பெற்றோரது பயத்தைக் கண்டு அவர் பரிதாபப்பட்டிருப்பார். அதற்கும் மேலாக, அவருடைய பரிதாபத்தை அதிகம் பெற்றவர்கள் அந்த பரிசேயர்கள். கடவுளுக்கும், ஆலயத்திற்கும் மிக நெருக்கத்தில் வாழும் அவர்கள், கடவுளைக் காணமுடியாத குருடர்களாய் இருக்கிறார்களே என்று, அவர் பரிதாபப்பட்டிருப்பார்.

பார்வை பெற்றவரின் சாட்சியம், தீவிரமாக, துணிச்சலாக இருந்ததால், அவரை, கோவிலிலிருந்து, யூத சமூகத்திலிருந்து வெளியேற்றினர், பரிசேயர்கள். அதுவரை ஒதுங்கியிருந்த இயேசு, இப்போது அவரைச் சந்தித்தார். அச்சந்திப்பில், அம்மனிதரின் சாட்சியம் இன்னும் ஆழப்பட்டது. முழுமை அடைந்தது. தனக்கு புதுமை செய்தவர், 'இயேசு' என்றும், 'இறைவாக்கினர்' என்றும் (யோவான் 9:15,17) படிப்படியாக ஏற்றுக்கொள்ளும் அளவு, அக ஒளி பெற்ற அவர், இறுதியில், இயேசுவைச் சந்தித்தபோது, அவரது அகம் முழுவதும் இறை ஒளியால் நிறைந்தது. இயேசுவின் முன் "ஆண்டவரே, நம்பிக்கை கொள்கிறேன்" (யோவான் 9:38) என்று முழுமையாய் சரணடைந்தார்.

உள்ளத்தில் ஏற்படும் உணர்வுகளால் எப்படி பார்வை இழக்கிறோம் என்பதைப் பலவாறாக நாம் கூறுவோம். பொதுவாக, எந்த ஒரு உணர்ச்சியுமே ஓர் எல்லையைத் தாண்டும்போது, அந்த உணர்ச்சி நம்மைக் குருடாக்கி விடுவதாகத்தான் அடிக்கடி கூறுகிறோம். 'கண்மூடித்தனமான காதல்' என்றும், "கண்ணு மண்ணு தெரியாமல்" செயல்படுதல் என்றும் பல விதமான எண்ணங்கள் நம் பேச்சு வழக்கில் உள்ளன!

உள்ளத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகளால், குறிப்பாக, வெறுப்பால், மன்னிக்க முடியாத ஆத்திரத்தால் நமது அறிவுக் கண்கள் குருடாகிப் போகாமல் வாழ, இறைவனின் அருளை நாடுவோம். இரேச்சல், அமேனே, இயேசுவின் அருளால் பார்வை பெற்றவர் போன்ற எத்தனையோ நல்ல உள்ளங்கள் நமக்குச் சொல்லித்தரும் இந்த அற்புதப் பாடத்தை வாழ்வாகக முயல்வோம். மன்னிப்பு பெறுவதாலும், தருவதாலும், நாம் பெறும் பார்வை, பழுதற்றதாய், பாசமுள்ளதாய், அமையட்டும்!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.