2017-04-06 16:55:00

ஆர்ஜென்டீனா வெள்ளம் குறித்து திருத்தந்தையின் அனுதாப மடல்


ஏப்.,06,2017. அண்மைய மழை, வெள்ளம் இவற்றின் காரணமாக, பெரும் துன்பங்களைச் சந்தித்து வரும் ஆர்ஜென்டீனா மக்களுடன் தான் செபத்தில் இணைந்திருப்பதை அவர்களுக்குக் கூறுங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒரு மடல் வழியே பேராயர் ஒருவரிடம் தெரிவித்துள்ளார்.

பெரும் மழை, வெள்ளம், ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, ஆறுதலும், உறுதியும் வழங்கும் வண்ணம், திருத்தந்தை எழுதியுள்ள இம்மடல், ஆர்ஜென்டீனா ஆயர் பேரவைத் தலைவர், பேராயர் José María Arancedo அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக, பல்வேறு தியாகங்கள் புரிந்து, அரும்பாடுபட்டு கட்டியெழுப்பிய வீடுகள், நிலங்கள், உடைமைகள் அனைத்தையும் வெள்ளத்தால் இழக்க நேரிடுகையில் உருவாகும் வலியை தான் உணர்வதாக, திருத்தந்தை, இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டோருக்குப் பணிபுரியும் அரசுத் துறையினர், பிறரன்பு அமைப்பினர், தன்னார்வத் தொண்டர்கள் அனைவரையும் தான் பாராட்டுவதாகவும், அவர்களுக்கு தன் ஆசீரை வழங்குவதாகவும் திருத்தந்தை தன் மடலில் கூறியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.