2017-04-07 14:39:00

மகாவீர் ஜெயந்திக்கு திருப்பீட பல்சமய அவை செய்தி


ஏப்.07,2017. சமுதாயத்தில் அமைதியைப் பேணிக்காப்பதற்கென, குடும்பங்களில் வன்முறையற்ற வழிகளைக் கடைப்பிடிக்குமாறு, திருப்பீட பல்சமய உரையாடல் அவை, கிறிஸ்தவர்களுக்கும், சமணர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.

ஏப்ரல் 09, வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படும், சமணர்களின் மிக முக்கியமான விழாவான மகாவீர் ஜெயந்திக்கென செய்தி வெளியிட்டுள்ள திருப்பீட பல்சமய அவை, இவ்விழா, சமண மதத்தவரின் மனங்களிலும், குடும்பங்களிலும், சமூகங்களிலும், மகிழ்வையும், அமைதியையும் வழங்குவதாக என வாழ்த்தியுள்ளது.

மக்கள் மத்தியில் அமைதியை, குறிப்பாக, வன்முறையற்ற கலாச்சாரத்தைப் பேணி வளர்ப்பது, இந்நவீன காலத்தில், நம் மனங்களில் முக்கியமாக உள்ளது என்றும், சமணர்களும் கிறிஸ்தவர்களும், அன்பு மற்றும் வன்முறையற்ற வாழ்வுக்கு முன்னுரிமை கொடுக்கின்றனர் என்றும், அச்செய்தி கூறுகிறது.

அமைதியான ஓர் உலகை அமைப்பதற்கு, குடும்பங்களில் வன்முறையற்ற கலாச்சாரம் கடைப்பிடிக்கப்பட வேண்டும் எனவும், வன்முறை வளர்ந்துவரும் இன்றைய சமுதாயத்தில், குடும்பங்கள், இத்தகைய கலாச்சாரத்தின் சாரமுள்ள பள்ளிகளாக மாறி,  வன்முறையற்ற தன்மையின் மதிப்பை வளர்ப்பதற்கு, அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும் எனவும், திருப்பீட பல்சமய உரையாடல் அவை கேட்டுக்கொண்டுள்ளது.

இச்செய்தியில், திருப்பீட பல்சமய அவை உரையாடல் தலைவர், கர்தினால் Jean-Louis Tauran, அவ்வவையின் செயலர் செயலர் ஆயர் Miguel Angel Ayuso Guixot ஆகிய இருவரும் கையெழுத்திட்டுள்ளனர்.

தீர்த்தங்கார் வர்த்தமான மகாவீர் அவர்களின் 2615வது பிறந்த நாள், வருகிற ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகின்றது. சமண மதத்தின் மிக உயரிய பண்பு, வன்முறையற்ற தன்மை(அகிம்சா) ஆகும்.   

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.