ஏப்.08,2017. சிரியாவில் புரட்சியாளர்கள் ஆக்ரமிப்பிலுள்ள Idlib நகருக்கு அருகில் வேதியத் தாக்குதல் நடத்தப்பட்டதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சிரியாவின் இராணுவத்தளத்தைத் தாக்குவதற்கு அமெரிக்க ஐக்கிய நாடு தீர்மானித்திருப்பது குறித்து கவலை தெரிவித்துள்ளார், மும்பை பேராயர் கர்தினால் ஆசுவால்டு கிரேசியஸ்.
சிரியாவில் துன்புறும் சிறார், பெண்கள், குடும்பங்கள், நோயுற்றோர் மற்றும், வயது முதிர்ந்தோருக்கு, ஆசியத் திருஅவையின் சார்பில் தன் ஒருமைப்பாட்டையும், செபத்தையும் தெரிவித்துள்ளார் கர்தினால் கிரேசியஸ்.
ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பின் (FABC) தலைவருமாகிய கர்தினால் கிரேசியஸ் அவர்கள், சிரியா திருப்பீடத் தூதர் கர்தினால் மாரியோ செனாரி அவர்களுக்கு, மிகவும் துன்புறும் சிரியா மக்களுக்கு, ஆசியத் திருஅவையின் ஆறுதலையும் செபங்களையும் தெரிவித்துள்ளார்.
மனித வரலாற்றில், அதன் மிகக் கொடூரமான நிகழ்வுகளிலும்கூட கடவுள் பிரசன்னமாக இருக்கிறார் என்றும், கடவுள் நம்மைக் கைவிடவில்லை, ஆனால் கண்ணீர் சிந்தும் மக்களுக்கு ஆறுதலாக இருக்கிறார் என்றும் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், ஆசியச் செய்தி வழியாக, ஆசியத் திருஅவையின் செபங்களைத் தெரிவித்துள்ளார்.
ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |