2017-04-12 15:17:00

ஏப்ரல், மே மாதங்களில் திருத்தந்தை பங்கேற்கும் நிகழ்வுகள்


ஏப்.,12,2017. "தீமை என்ற விளங்காத உண்மை, மிக ஆழமாக இருக்கையில், இயேசுவின் வழியே ஊற்றப்பட்ட இறைவனின் அன்பு, அளவற்றதாக, வெற்றி பெறுவதாக அமைகிறது" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் டுவிட்டர் பக்கத்தில் இப்புதனன்று வெளியிட்டார்.

மேலும், புனித வாரத்தைத் தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்களில் திருத்தந்தை பங்கேற்கும் நிகழ்வுகளை, திருப்பீடம் இப்புதனன்று வெளியிட்டது.

ஏப்ரல் 20ம் தேதி, வருகிற வியாழனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் நகரில் உள்ள அனைத்து கர்தினால்களுடனும் ஓர் ஆலோசனைக் கூட்டத்தை மேற்கொள்கிறார்.

பாத்திமா நகரில் அன்னை மரியாவின் காட்சியைக் கண்ட மூன்று சிறாரில், Francesco Marto மற்றும், Giacinta Marto என்ற இருவர் உட்பட, புனிதர் பட்டம் பெறுவதற்குத் தகுந்தவர்கள் என்று, அண்மையில், திருத்தந்தையால் அறிவிக்கப்பட்ட அருளாளர்களின் புனிதர் பட்ட நிகழ்வுகளைக் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனைகள் நடைபெறும்.

மேலும், ஏப்ரல் 28, 29 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்து  நாட்டில் தன் திருத்தூதுப் பயணத்தை மேற்கொள்கிறார்.

மே மாதம், 7ம் தேதி, கொண்டாடப்படும் நல்லாயன் ஞாயிறன்று, காலை 9.15 மணிக்கு, புனித பேதுரு பசிலிக்காவில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இளையோர் பலரை, அருள்பணியாளர்களாக அருள்பொழிவு செய்வார்.

பாத்திமா நகரில் அன்னை மரியா தோன்றிய நிகழ்வின் 100ம் ஆண்டை சிறப்பிக்கும் வண்ணம், மே மாதம், 12, 13 ஆகிய இரு நாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமா திருத்தலத்திற்கு திருத்தூதுப் பயணம் செல்வார்.

மே மாதத்தின் இறுதியில், 27ம் தேதி, சனிக்கிழமை, இத்தாலியின் ஜெனோவா நகரில் திருத்தந்தையின் மேய்ப்புப்பணி பயணம் நிகழவிருக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.