2017-04-12 15:29:00

துன்புறும் மக்களை அரவணைக்க, திருத்தந்தையின் எகிப்து பயணம்


ஏப்.,12,2017. காயப்பட்டிருக்கும் எகிப்து சமுதாயத்தை அரவணைக்கும் நோக்கத்துடன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்து நாட்டிற்குச் செல்கிறார் என்று திருப்பீட உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஏப்ரல் 28, 29 ஆகிய இருநாள்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவரகள் எகிப்தில் மேற்கொள்ளவிருக்கும் திருத்தூதுப் பயணத்தைக் குறித்து, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்திரி அவர்கள், வத்திக்கான் நாளிதழ் L'Osservatore Romanoவுக்கு அளித்த பேட்டி, 'வேதனையுறும் மக்களை அரவணைக்க எகிப்தில் திருத்தந்தையின் பயணம்' என்ற தலைப்பில், இப்புதனன்று வெளியானது.

எகிப்து காப்டிக் கிறிஸ்தவ கோவில்களில், குருத்தோலை ஞாயிறைக் கொண்டாட, விசுவாசிகள் ஏந்திச் சென்ற குருத்தோலைகள், மறைசாட்சிகளை அடையாளப்படுத்தும் குருத்தோலைகளாக மாறிவிட்டன என்று கூறிய, கர்தினால் சாந்திரி அவர்கள், இந்த வன்முறையில் இறந்தோர் அனைவருக்கும் மறைசாட்சிகளுக்கு உரிய மரியாதையை, காப்டிக் திருத்தந்தை 2ம் Tawadros அவர்கள் வழங்கியதை தன் பேட்டியில் பாராட்டினார்.

வன்முறையால் காயப்பட்டிருந்த ஆப்ரிக்க நாடுகளில், நம்பிக்கையையும், சமாதானத்தையும் கொணர, திருத்தந்தை மேற்கொண்ட திருத்தூதுப் பயணங்களைப் போலவே, எகிப்தில் உள்ள காப்டிக், கல்தேய, ஆர்மீனிய, சிரிய, மாரனைட் பிரிவுகளைச் சேர்ந்த கிறிஸ்தவர், மற்றும் கத்தோலிக்கர் அனைவருக்கும், திருத்தந்தை, நம்பிக்கையையும், அமைதியையும் வழங்கச் செல்கிறார் என்று கர்தினால் சாந்திரி அவர்கள் தன் பேட்டியில் எடுத்துரைத்தார்.

மேலும், சிரியாவில் நிலவும் துன்பகரமானச் சூழல், புனித பூமியில் நிலவும் அமைதியின்மை, எருசலேமில், இயேசுவின் கல்லறைக் கோவில் சீரமைப்பு ஆகியவை குறித்த கருத்துக்களையும், கர்தினால் சாந்திரி அவர்கள், இப்பேட்டியில் பகிர்ந்துகொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.