2017-04-14 11:39:00

முன்னாள் திருத்தந்தைக்கு வாழ்த்து தெரிவித்த திருத்தந்தை


ஏப்.,14,2017. புனித வியாழன் காலை, புனித எண்ணெய் அர்ச்சிக்கும் திருப்பலியை, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் நிறைவேற்றியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரோம் மறைமாவட்டத்தின் 10 பங்குகளில் பணியாற்றும் அருள்பணியாளர்களுடன் மதிய உணவருந்தினார்.

திருப்பீட உயர் அதிகாரியான, பேராயர் Angelo Becciu அவர்களின் இல்லத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மதிய உணவின்போது, பங்கு அருள்பணியாளர்கள் பகிர்ந்துகொண்ட பிரச்சனைகளுக்கு, சகோதர உணர்வுடன் செவிமடுத்தத் திருத்தந்தை, தன் பணி வாழ்வில் சந்தித்தப் பிரச்சனைகளை அவர்களுடன் பகிர்ந்து, ஆலோசனைகள் வழங்கினார்.

புனித வியாழன் பிற்பகலில், முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் தங்கியிருக்கும் "Mater Ecclesiae" இல்லத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து உயிர்ப்புப் பெருவிழா வாழ்த்துக்களை அவருக்குத் தெரிவித்தார்.

மேலும், குறிப்பாக, ஏப்ரல் 16, உயிர்ப்புப் பெருவிழாவன்று, முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள், தன் 90வது பிறந்தநாளைச் சிறப்பிக்கவிருப்பதால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.