2017-04-17 15:32:00

அல்லேலூயா வாழ்த்துரைக்குப்பின் திருத்தந்தையின் வாழ்த்து


ஏப்.,17,2017. உயிர்ப்புப் பெருவிழாவையொட்டி சிறப்பிக்கப்படும் எட்டு நாள்கள், கிறிஸ்துவின் உயிர்ப்பு மகிழ்வைத் சுவைப்பதற்கும், உயிர்த்த இறைவனின் அமைதி இவ்வுலகில் பரவுவதற்கும் நமக்கு வழங்கப்பட்டுள்ள காலம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்திங்களன்று வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரைக்குப்பின் கூறினார்.

ஏப்ரல் 17, இத்திங்களன்று, புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்தோருக்கு அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கியபின், உலகின் பல நாடுகளிலிருந்தும், உயிர்ப்பு விழாவைக் கொண்டாட உரோம் நகருக்கு வருகை தந்துள்ள திருப்பயணிகள் அனைவரையும் சிறப்பாக வாழ்த்தினார், திருத்தந்தை.

மேலும், "ஆம், நமக்கு உறுதியாகத் தெரியும்: கிறிஸ்து உண்மையிலேயே உயிர்த்தெழுந்தார்!" என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தியாக இத்திங்களன்று வெளியாயின.

இதற்கிடையே, உயிர்ப்பு ஞாயிறன்று காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமையேற்று நடத்திய உயிர்ப்பு விழா திருப்பலியிலும், அதைத் தொடர்ந்து, 'ஊருக்கும் உலகுக்கும்' செய்தியை அவர் வழங்கிய நிகழ்விலும் 60,000த்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர் என்றும், திருத்தந்தை வழங்கிய 'ஊருக்கும் உலகுக்கும்' செய்தி, 160க்கும் மேற்பட்ட தொலைக்காட்சி நிலையங்கள் வழியே நேரடியாக ஒளிபரப்பானது என்றும், வத்திக்கான் தகவல்துறை அறிவித்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.