2017-04-17 15:27:00

இறுதி வெற்றி, வாழ்வுக்கு மட்டுமே உரியது - திருத்தந்தை


ஏப்.,17,2017. மரணத்திற்கு இறுதி வெற்றி இல்லை, அந்த வெற்றி, வாழ்வுக்கு மட்டுமே உரியது என்பதை, சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்தெழுந்த இயேசு நமக்கு சொல்லித் தருகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 17, இத்திங்களன்று கூறினார்.

உயிர்ப்புப் பெருவிழாவின் அடுத்த நாளான திங்களன்று, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு, திருத்தந்தை வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையில், உயிர்ப்பு, நம்மை புதிய மனிதர்களாக வாழ அழைக்கிறது என்று எடுத்துரைத்தார்.

"நீங்கள் விரைந்து சென்று, 'இறந்த அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்' எனச் சீடருக்குக் கூறுங்கள்" (மத். 28:7) என்ற செய்தி, கல்லறைக்குச் சென்ற பெண்களுக்குக் கிடைத்தது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, நாமும், விரைந்து சென்று, நற்செய்தியை பகிர்வதற்குப் பணிக்கப்பட்டுள்ளோம் என்று கூறினார்.

உயிர்ப்பின் மக்களாகிய நாம், இவ்வுலகில் கிறிஸ்து தொடர்ந்து வாழ்கிறார், இவ்வுலகத் துன்பங்களிலிருந்து மக்களை விடுவிக்கிறார் என்பதைப் பறைசாற்றி, மக்கள் மனதில் நம்பிக்கையை வளர்ப்பது நமது கடமை என்பதை, திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தன் மகன் இயேசுவின் மரணத்திற்கும், உயிர்ப்புக்கும் மௌனமான சாட்சியாக விளங்கிய அன்னை மரியா, விரக்தியிலும் நம்பிக்கையின்மையிலும் வாழும் இன்றைய உலகின் மனிதர்கள், உயிர்ப்பின் சக்தியை உணர்வதற்கு உதவி செய்யவேண்டும் என்று செபிப்போம் என திருத்தந்தை தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.