2017-04-19 16:30:00

இயேசு சபை புதிய தியாக்கோன்களை வாழ்த்திய திருத்தந்தை


ஏப்.19,2017. ஏப்ரல் 19, இப்புதனன்று காலை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் மறைக்கல்வி உரை வழங்கியபின், இச்செவ்வாயன்று தியாக்கோன்களாக அருள்பொழிவு செய்யப்பட்ட இயேசு சபை துறவிகளுக்கு தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்து, வளாகத்தில் கூடியிருந்த பல்வேறு குழுவினருக்கு, மறைக்கல்வி உரைக்குப்பின் வாழ்த்துக்களைத் தெரிவித்த திருத்தந்தை, உரோம் நகரின் இயேசு ஆலயத்தில் அருள் பொழிவு பெற்ற, இயேசு சபையின் புதிய தியாக்கோன்கள் 15 பேருக்கும், அவரது உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துக்களையும், ஆசீரையும் கூறினார்.

மேலும், அடுத்து வரும் நாட்களில், நிகழும் மூன்று முக்கியமான நிகழ்வுகளில் தன் சார்பில் பங்கேற்க மூன்று கர்தினால்களை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நியமித்துள்ளார்.

அல்பேனியா நாட்டில், Scutari என்றழைக்கப்படும் தேசியத் திருத்தலத்தில், Shkodra நல்லாலோசனை அன்னை மரியாவின் 550வது விழா, ஏப்ரல் மாதம் 26ம் தேதி, அடுத்த புதனன்று நடைபெறுவதையொட்டி, அந்நிகழ்வில் பங்கேற்க, கர்தினால் Franc Rodé அவர்களை திருத்தந்தை நியமித்துள்ளார்.

மே மாதம், 4ம் தேதி முதல், 6ம் தேதி முடிய போர்த்துக்கல் நாட்டின் பாத்திமா திருத்தலத்தில் நடைபெறும் ஒரு பன்னாட்டு மாநாட்டிற்கு, துறவற வாழ்வில் அர்ப்பணிக்கப்பட்டோர் பேராயத்தின் தலைவரான கர்தினால் João Braz de Aviz அவர்களை தன் சார்பில் நியமித்துள்ளார், திருத்தந்தை.

Kazakhstan நாட்டில், நடைபெறும் மரியன்னை மாநாட்டின் இறுதி நாள் நிகழ்வுகள், மே மாதம் 13ம் தேதி சிறப்பிக்கப்படுவதையொட்டி, அந்நிகழ்வில், தன் சார்பில் பங்கேற்க, கர்தினால் Paul Josef Cordes அவர்களை, திருத்தந்தை நியமித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.