2017-04-19 17:20:00

சிரியாவின் கொடுமைகள் உலக சமுதாயத்திற்கு அவமானம்


ஏப்.19,2017. ஐ.நா.வின் பாதுகாப்பு அவையில் உள்ள 15 உறுப்பினர்களும் ஒருங்கிணைந்தால் மட்டுமே, மனித உரிமை மீறல்களை இவ்வுலகில் தடுக்க முடியும் என்று ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கூறினார்.

'மனித உரிமைகளும், ஆயுதம் தாங்கிய மோதல்களும்' என்ற தலைப்பில், ஏப்ரல் 18, இச்செவ்வாயன்று ஐ.நா. தலைமையகத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் உரையாற்றுகையில், கூட்டேரஸ் அவர்கள், ஒருங்கிணைந்த முயற்சி இருந்தால் மட்டுமே, பிரச்சனைகளை உடனுக்குடன் தீர்க்க முடியும் என்று கூறினார்.

அமைதி, பாதுகாப்பு, நீடித்த முன்னேற்றம், மனித உரிமைகள் என்ற அனைத்து அம்சங்களும் ஒன்றோடொன்று இணைந்தது என்பதை, தன் உரையில் சுட்டிக்காட்டிய கூட்டேரஸ் அவர்கள், இந்த உன்னத குறிக்கோள்கள் அனைத்தையும் அடைவதற்கு, ஓய்வின்றி உழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

சிரியா நாட்டு மக்கள் அனுபவித்துவரும் கொடுமைகளை முடிவுக்குக் கொணரமுடியாமல் உலக சமுதாயம் இருப்பது, நமக்கு பெரும் அவமானம் என்று வலியுறுத்திக் கூறிய கூட்டேரஸ் அவர்கள், அனைவரும் இணைந்து வந்தால் மட்டுமே இம்மக்களுக்கு உதவ இயலும் என்பதை எடுத்துரைத்தார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.