2017-04-19 15:34:00

பாசமுள்ள பார்வையில்.. தாயன்புக்கு நிகரான அன்பு உளதோ?


அன்று வேலை முடிந்து வீட்டிற்கு வந்த தன் கணவர் ராஜனிடம், அந்த முதியோர் இல்லத்தில் இருந்து வந்திருந்த கடிதத்தை நீட்டி, உங்களை நாளைக்கு அங்கு வரச் சொல்லியிருக்கிறார்கள், அங்கே போய்விட்டுத் திரும்பும்போது, அங்கிருக்கும் உங்கள் அம்மாவையும் கையோடு கூட்டிக்கொண்டு வந்துவிடாதீர்கள் என எச்சரித்தார் ராஜாத்தி. சென்ற மாதம் தானே அம்மாவைப் பார்த்து வந்தேன், அதற்குள் என்ன அவசரமோ என்று, அம்மாவைப் பற்றிய இனம்புரியாத பயம் ஏற்பட்டது ராஜனுக்கு. அதேநேரம் அவருக்கு, மனைவி மீது கோபம் கோபமாயும் வந்தது. மறுநாள் காலை அம்மாவைப் பார்க்க முதியோர் இல்லம் சென்ற ராஜனிடம், அவ்வில்லத் தலைவர், சார், உங்கள் அம்மா, இந்தக் கவரை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்கள் என்று அதைக் கொடுத்தார். அதைப் பிரித்துப் பார்த்தபோது ராஜன் பெயருக்கு இரண்டு இலட்சம் ரூபாய்க்கான காசோலையும், ஒரு கடிதமும் இருந்தன. அதை வாசித்த ராஜன் அதிர்ந்து போனார்.

அன்பு மகனுக்கு, உன் தந்தை இறந்தபோது, உன்னை நான் சுமையாக அப்போது நினைக்கவில்லை. இப்போதும் உனக்கு நான் சுமையாக இருக்க விரும்பவில்லை. உன் மனைவி எதிர்பார்ப்பது போல் என்னால் உடல் உழைப்பைத் தர முடியவில்லை. நீ கஷ்டப்படுவதைப் பார்க்கவும் என்னால் முடியவில்லை. இந்த நிலையில் உனக்கு ஏதாவது செய்ய வேண்டுமே என்று ஏங்கிக்கொண்டிருந்தேன். அப்போது செல்வந்தர் ஒருவருக்கு, அவசரமாக சிறுநீரகம் தேவைப்பட்டது. அதனால் எனது சிறுநீரகத்தை விற்று அந்தப் பணத்தை உனக்கு கொடுத்திருக்கிறேன். கடனையெல்லாம் அடைத்துவிட்டு என் பேத்தியை நன்கு படிக்க வை! அவள் நாளை, உன்னையும், உன் மனைவியையும் காப்பாத்துவாள். நீங்கள் எல்லாரும் நல்லாயிருக்க வேண்டுமென நான் அந்தக் கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்! நான் போகிறேன்... இப்படிக்கு உன் அன்பு அம்மா!

இது கதையல்ல, உண்மையில் நடந்தது. பெயர்கள் மட்டும் மாற்றப்பட்டுள்ளன. அன்பு என்பது, அன்னையிடம் மட்டுமே எல்லாக் காலங்களிலும் அமுதமாய் கிடைக்கும். தாயின் அன்பை யாருக்காகவும் தள்ளி வைக்க வேண்டாமே.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.