2017-04-20 16:25:00

செசேனா மற்றும் பொலோஞாவுக்கு திருத்தந்தையின் பயணம்


ஏப்.20,2017. இத்தாலியின் வடபகுதியில் அமைந்துள்ள செசேனா மற்றும் பொலோஞா ஆகிய நகரங்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 1ம் தேதி, ஞாயிறன்று, மேய்ப்புப்பணி பயணம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பொலோஞா பேராயர் Matteo Maria Zuppi மற்றும் செசேனா ஆயர் Douglas Regattieri ஆகியோரின் அழைப்பை ஏற்று, திருத்தந்தை மேற்கொள்ளும் இப்பயணம், திருத்தந்தை 6ம் பயஸ் அவர்கள் பிறந்ததன் மூன்றாம் நூற்றாண்டையொட்டி நிகழ்கிறது.

1717ம் ஆண்டு டிசம்பர் 25, கிறிஸ்துபிறப்பு விழாவன்று செசேனாவில் பிறந்த Giovanni Angelo Braschi அவர்கள், 1775ம் ஆண்டு முதல், 1799ம் ஆண்டு வரை, பிரெஞ்சு புரட்சி நடைபெற்ற காலத்தில், திருஅவையின் தலைவராக 24 ஆண்டுகள் பணியாற்றியவர்.

அக்டோபர் 1ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் இப்பயணம், காலை 7 மணிக்கு துவங்கி, மாலை 8 மணியளவில் நிறைவடையும்.

நகர அதிகாரிகள், அருள்பணியாளர்கள், இளையோர், புலம் பெயர்ந்தோர், தொழிலாளர்கள் என்ற பல குழுவினரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மதிய உணவை, வறியோருடன் உண்டபின், தன் மேய்ப்புப்பணி பயணத்தின் இறுதி நிகழ்வாக, பொலோஞாவில், மாலை 5 மணிக்கு, திருப்பலியை நிகழ்த்துவார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.