2017-04-20 15:14:00

பாசமுள்ள பார்வையில்.. தாய் மனம், தாய்ப் பாசம்


அந்தத் தாய்க்கு, வசந்தி, புவனா என இரு மகள்கள். கணவர் இறந்த பின், சமையல் வேலைகள் செய்து, இவ்விரு மகள்களையும் நன்றாகப் படிக்கவைத்து, நல்ல இடங்களில் திருமணமும் செய்து வைத்தார், அந்தத் தாய். பக்கத்து ஊரில் வாழ்ந்த வசந்தியின் குடும்பம் நடுத்தரமானது. சென்னையில் வாழ்ந்த புவனாவின் குடும்பம் வசதியானது. அந்த ஆண்டு ஊர் திருவிழாவிற்கு, இரு மகள்களும் குடும்பத்தோடு அம்மா வீட்டுக்கு வந்திருந்தனர். அச்சமயத்தில் அம்மாவின் உபசரிப்பைப் பார்த்த வசந்தி, வசதி இருந்தால் ஒரு மாதிரியாகவும், இல்லாவிட்டால் வேறு மாதிரியாகவும் அம்மா நடந்து கொள்வதாக உள்ளுக்குள்ளே புழுங்கினாள். எனவே, கணவர் ஊர் திரும்பிய அன்று மதியமே ஊருக்குக் கிளம்பினாள் வசந்தி. அம்மா எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. புவனா, சென்னைக்குச் சென்றவுடன், வசந்தியைப் பார்க்கச் சென்றார் அம்மா. இந்தா வசந்தி.. இதுல ஐயாயிரம் ரூபாய் இருக்கு.. இப்ப நீ கஷ்டத்துல இருக்கிறே.. வச்சுக்க' என வசந்தியிடம் கொடுத்தார் அம்மா. `ஏதும்மா?' என்று வசந்தி கேட்டாள். `நான் கஷ்டத்துல இருக்கேன்னு சொல்லி புவனாகிட்டே வாங்கினேன். உன்னைச் சரியா கண்டுக்கவே இல்லைன்னு வருத்தப்பட்டிருப்பே. அடிக்கடி உன்னை நேர்ல பார்த்து நலம் விசாரிக்க முடியும்.. ஆனா, அவளை எப்பவாவது விசேஷம்னாதானே பார்க்க முடியும்.. தவிர, பக்கத்துல இருக்கிறதாலதான் அக்கா மேல பாசம் காட்டறாங்கன்னு அவ மனசுல தப்பான எண்ணம் வந்துடக் கூடாது பாரு.. பொதுவா ரெண்டு பேர் கிட்டேயும் ஒரே மாதிரிதான் அன்பு காட்டினேன்.. நீதான் மனசுக்குள்ளே சலனத்தை ஏற்படுத்திக்கிட்டு வெறுப்போட வந்துட்டே.. உன் கஷ்டம் தெரிஞ்சுதான் எனக்காகப் பணம் கேட்டேன். தங்கைகிட்டே கஷ்டம்னு சொல்லி நீ கேட்டா கவுரவமாக இருக்காது, ஆனா, மக கிட்டே தாய் கேட்கறதிலே கவுரவம் குறைஞ்சிடாது' என்றார் அம்மா.

அன்னையின் அன்பு, ஆழம் காண இயலா ஆழ்கடல்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.