2017-04-22 16:45:00

ஹெபடிட்டிஸ் நோயை ஒழிக்க WHO திட்டம்


ஏப்.22,2017. உலகில் ஏறக்குறைய 32 கோடியே 50 இலட்சம் பேர், ஹெபடிட்டிஸ் பி (HBV) அல்லது சி (HCV) நோய்க் கிருமியுடன் வாழ்வதாகவும், இவர்களில் பெரும்பாலான பேருக்கு, வாழ்வைப் பாதுகாக்கும் மருத்துவப் பரிசோதனைகளும், சிகிச்சைகளும் கிடைக்கவில்லை எனவும், இதனால் இலட்சக்கணக்கான இந்நோயாளர்கள், கல்லீரல் நோய், புற்றுநோய் ஆகியவற்றால் தாக்கப்பட்டு, இறக்கும் ஆபத்தில் இருப்பதாகவும், இவ்வெள்ளியன்று வெளியான ஒரு புதிய அறிக்கை கூறுகிறது.

உலகளாவிய ஹெபடிட்டிஸ் (hepatitis) அறிக்கை 2017 என்ற தலைப்பில், புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுப் பேசிய, WHO என்ற உலக நலவாழ்வு நிறுவனத்தின் பொது இயக்குனர் Margaret Chan அவர்கள், இந்நோயை ஒழிப்பதற்கு, உலக நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என்றும், எச்.ஐ.வி மற்றும் காசநோய் போன்று, ஹெபடிட்டிஸ் நோயினாலும், உலகளவில் அதிகமானோர் இறக்கின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

ஹெபடிட்டிஸ் நோயினால், 2015ம் ஆண்டில் 13 இலட்சத்து நாற்பதாயிரம் பேர் இறந்துள்ளனர் எனவும், இந்நோயால் ஏறக்குறைய 17 இலட்சத்து 50 ஆயிரம் பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டனர் எனவும், 2015ம் ஆண்டில், ஹெபடிட்டிஸ் பி நோயுற்றோர் ஒன்பது விழுக்காட்டினரும், ஹெபடிட்டிஸ் சி நோயுற்றோர் இருபது விழுக்காட்டினரும் மட்டுமே கண்டறியப்பட்டனர் எனவும், WHO நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

அமைதியாக உயிர்களைக் கொல்லும் கல்லீரல் அழற்சி என்ற இந்நோயில் ஏ, பி, சி, டி, இ என்ற பிரிவுகள் உள்ளன. இந்நோயின் பி, சி மற்றும் டி போன்ற வகைகள் இரத்தம் உட்பட தொற்று பாதிப்புள்ள உடலிருந்து வெளியேறும் திரவங்களை மற்றவர்கள் தொடும்போது அல்லது தொடர்பில் வரும்போது பரவும். ஹெபடிட்டிஸ் ஏ மற்றும் ஹெபட்டிடஸ் இ ஆகியவை, அசுத்தமான உணவு அல்லது தண்ணீர் மூலம் பரவும்.

ஆதாரம் : WHO/பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.