2017-04-24 14:27:00

பாசமுள்ள பார்வையில்.. தாய்மைக்கு பாலினம் கிடையாது


முப்பத்தேழு வயது நிரம்பிய கவுரி சாவந்த் அவர்கள், மும்பையை சேர்ந்த மூன்றாம் பாலினத்தவர். ஆனால் இவருக்கு பதினெட்டு வயது நடந்தபோது இவரது தந்தையால் வீட்டைவிட்டு வெளியே துரத்தப்பட்டார். பெற்ற தாயை பார்த்தவர் இல்லை இவர். தனியே எப்படி வாழ்வது என்று நினைத்தபோதே, இவரை வேதனை வாட்டியது. ஆயினும், தற்போது சமூக ஆர்வலராக உருவெடுத்து, அப்பணிக்கு, தன்னை அர்ப்பணித்துள்ளார். பாலியல் தொழில் செய்து வந்த இவரது நண்பர் ஒருவருக்கு, ஆறு வயதில் ஒரு மகள். அவர் பெயர் காயத்ரி. தன் அம்மா ஒருவித நோயால் தாக்கப்பட்டு அடிக்கடி சோர்ந்து படுப்பதைப் பார்த்தார் சிறுமி காயத்ரி. ஆனால் அந்நோய் என்னவென்பது காயத்ரிக்குத் தெரியவில்லை. ஒருநாள் தன் அம்மாவை அவசர மருத்துவ சிகிச்சை வண்டியில் அழைத்துச் சென்றனர். அதன் பின்னர் காயத்ரியின் அம்மா வீடு திரும்பவே இல்லை. ஏனென்றால் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டிருந்த காயத்ரியின் அம்மா இறந்து விட்டார். எனவே காயத்ரி, ஆதரவில்லாமல் அனாதையானார். எனினும், சிறுமி காயத்ரியை மூன்றாம் பாலினத்தவராகிய கவுரி, தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று, சொந்த மகளாக, பாசம் காட்டி வளர்த்து வருகிறார். கவுரியால் சட்டப்படி காயத்ரியை தத்தெடுக்க முடியாது. ஆயினும், காயத்ரியை அம்மாவுக்கு அம்மாவாக, அன்போடு வளர்த்து வருகிறார் கவுரி. அவரை மருத்துவராக்க விரும்புகிறார் கவுரி. ஆனால், காயத்ரியோ, தனது வளர்ப்புத் தாய் போன்று உள்ள மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளுக்காகப் போராட, வழக்கறிஞராக விரும்புகிறார். இதை, விக்ஸ் விளம்பரத்தில் கடந்த மார்ச் 31ம் தேதி அருமையாக காண்பித்துள்ளனர். இது, தாய்மைக்கு அருமையான விளம்பரம் என்று பலர் பாராட்டியுள்ளனர். இதனை, இந்தியாவில் 90 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் இணையத்தில் பார்வையிட்டுள்ளனர்.

*ஒவ்வொரு மனிதரும் அன்புகூரப்பட தகுதியுள்ளவர்.

*தாய்மைக்குப் பாலினம் கிடையாது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.