2017-04-27 15:41:00

C-9 கர்தினால்கள் குழுவின் 19வது கூட்டம் பற்றிய தகவல்கள்


ஏப்.27,2017. ஏப்ரல் 24, திங்கள் காலை முதல், ஏப்ரல் 26 புதன் மதியம் வரை நடைபெற்ற, கர்தினால்கள் ஆலோசனைக் குழுவின் 19வது கூட்டத்தைப் பற்றிய தகவல்களை, திருப்பீட செய்தித் தொடர்பாளர், Greg Burke அவர்கள், செய்தியாளர்களிடம் இப்புதன் மதியம் தெரிவித்தார்.

திருப்பீடத்தின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுவரும் மாற்றங்கள், இக்கூட்டத்தில் தொடர்ந்து பேசப்பட்டது என்று கூறிய Burke அவர்கள், குறிப்பாக, நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயம், புதிய வழியில் நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பீட அவை ஆகிய துறைகள் பற்றிய விவாதங்கள், இக்கூட்டத்தில் பெருமளவு இடம்பெற்றன என்று கூறினார்.

உலகின் பல நாடுகளில் இயங்கிவரும் ஆயர்கள் பேரவைகளுக்கும், திருப்பீடத்திற்கும் உள்ள உறவுகள் குறித்து கர்தினால்கள் குழுவில் கலந்துரையாடல் நிகழ்ந்ததென்று Burke அவர்கள் எடுத்துரைத்தார்.

மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த அமர்வுகள் அனைத்திலும் கலந்துகொண்ட திருத்தந்தை, ஏப்ரல் 26 நடைபெற்ற மறைக்கல்வி உரை காரணமாக, புதனன்று காலை கூட்டத்தில் மட்டும் கலந்துகொள்ளவில்லை என்பதையும் Burke அவர்கள் சுட்டிக்காட்டினார்.

C 9 என்றழைக்கப்படும் கர்தினால்களின் அடுத்த  ஆலோசனைக் கூட்டம், ஜூன் 12 முதல் 14 முடிய நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.