2017-04-27 15:34:00

பாப்பிறை அறக்கட்டளையின் பிரதிநிதிகளுடன் திருத்தந்தை


ஏப்.27,2017. பாப்பிறை அறக்கட்டளையின் ஆண்டு கூட்டத்தில் கலந்துகொள்ள, உரோம் நகருக்கு வருகை தந்துள்ள பன்னாட்டு உறுப்பினர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து தன் வாழ்த்துக்களைத் தெரிவித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருஅவையின் பணிகளில், குறிப்பாக, திருத்தந்தையின் உள்ளத்திற்கு மிக நெருக்கமான பணிகளில் உதவிசெய்ய உருவாக்கப்பட்டுள்ள பாப்பிறை அறக்கட்டளையின் உறுப்பினர்கள், உயிர்த்த இயேசுவின் மகிழ்வை நிறைவாகப் பெறவேண்டும் என்று, தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார், திருத்தந்தை.

வன்முறை, பேராசை, அக்கறையற்ற மனநிலை இவற்றால் துன்புறும் இவ்வுலகிற்கு அவசியத் தேவையாக உள்ள நற்செய்தியின் நம்பிக்கையை, பாப்பிறை அறக்கட்டளையின் உறுப்பினர்கள் வழங்கி வருவது கண்டு தான் மகிழ்வதாக திருத்தந்தை எடுத்துரைத்தார்.

தேவையில் இருப்போர், குறிப்பாக, மூன்றாம் உலகைச் சார்ந்தவர்கள், ஆன்மீக வழிகளிலும், இவ்வுலக வழிகளிலும் முன்னேறிச்செல்ல இவ்வறக்கட்டளை உதவிகள் செய்யவேண்டும் என்று திருத்தந்தை, பன்னாட்டு பிரதிநிதிகளிடம் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.