2017-04-28 17:20:00

திருத்தந்தையின் பயணத்தை செபங்களால் தாங்கும் துறவிகள்


ஏப்.28,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எகிப்தில் மேற்கொண்டுள்ள திருத்தூதுப் பயணத்தை, தங்கள் பரிந்துரை செபங்களால் தாங்கி நிற்போம் என்று, அசிசி நகர் தலைமையக பொறுப்பாளர், அருள்பணி Mauro Gambetti அவர்கள் கூறினார்.

அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், எகிப்து சுல்தான் Melek-al-Kamel அவர்களுடன் மேற்கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க சந்திப்பின் 8வது நூற்றாண்டு நெருங்கி வரும் வேளையில், திருத்தந்தை மேற்கொண்டுள்ள இப்பயணம், பொருளுள்ளதாய் விளங்குகிறது என்று, அருள்பணி Gambetti அவர்கள் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்கும் இடையே பகைமை உணர்வுகள் பெருகியிருந்த வேளையில், 1219ம் ஆண்டு, அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள், எகிப்து சுல்தான் Melek-al-Kamel அவர்களைச் சந்திக்க, நிராயுத பாணியாய் சென்றதால், சுல்தான் மனம் மாறினார் என்பதும், இஸ்லாமிய கிறிஸ்தவ உறவுக்கு இது வழிவகுத்தது என்பதும், வரலாற்று குறிப்புகள்.

இச்சந்திப்பின் 8வது நூற்றாண்டு நிறைவு, 2019ம் ஆண்டு சிறப்பிக்கப்படுவதற்கு ஒரு முன்னோட்டமாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எகிப்து நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் அமைந்துள்ளது என்று, அருள்பணி Gambetti அவர்கள் சுட்டிக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.