2017-04-28 16:37:00

பாசமுள்ள பார்வையில் : ஒளியின் அன்னைமரியா,எகிப்து


எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவிலுள்ள புகழ்பெற்ற மாவட்டம் El Zeitoun. இது, 1968ம் ஆண்டுமுதல் 1971ம் ஆண்டுவரை இடம்பெற்ற அன்னைமரியா காட்சிகளுக்குப் புகழ்பெற்ற இடமாக உள்ளது. புனித யோசேப்பும், மரியாவும், குழந்தை இயேசுவும் பெத்லகேமிலிருந்து வெளியேறி எகிப்துக்குச் சென்ற வேளையில், திருக்குடும்பமாக அவர்கள் தங்கியிருந்த இடத்தில் இந்த ஆலயம் கட்டப்பட்டுள்ளதாக, பாரம்பரியம் சொல்கிறது. இவ்வாலயமும் திருக்குடும்பத்துக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. காப்டிக் கிறிஸ்தவ சபைக்குரிய இவ்வாலயத்தில் 1968ம் ஆண்டு ஏப்ரல் 2ம் தேதி மாலை தொடங்கி, ஓராண்டுக்கு மேலாக இலட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு வடிவங்களில் காட்சியளித்திருக்கிறார் அன்னைமரியா. இக்காட்சிகள் ஒளியால் நிறைந்திருந்ததால் இவ்வன்னை, ஒளியின் அன்னைமரியா எனவும் அழைக்கப்படுகிறார்.

இக்காட்சிகளை எகிப்து நாட்டவர், மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் என இலட்சக்கணக்கானோர் பார்த்துள்ளனர். ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், கத்தோலிக்கர், முஸ்லிம்கள், யூதர்கள், மத நம்பிக்கையற்றவர்கள் என பல்வேறு மக்கள் இக்காட்சிகளுக்குச் சாட்சி பகர்ந்துள்ளனர். நோயுற்றோர் குணமடைந்துள்ளனர், மத நம்பிக்கையற்ற பலர் மனமாறியுள்ளனர். இக்காட்சி 1971ம் ஆண்டுவரை நீடித்தது. ஏறக்குறைய 2,50,000 பேர் இக்காட்சிகளைப் பார்த்ததாகச் சொல்லப்படுகின்றது.

அண்மைய வன்முறைகளால் காயப்பட்டு, அமைதியிழந்து தவிக்கும் எகிப்து நாட்டிற்கு, அமைதியின் தூதராக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ள வேளையில், ஒளியின் அன்னை மரியா அவருக்கும், எகிப்து மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பையும், அமைதியையும் வழங்குவாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.