2017-05-01 15:46:00

கனவு காண்பதற்கு இளையோரை அழைக்கும் திருத்தந்தை


மே 01,2017. "இறைவன் நம்மைப்பற்றி கொண்டிருக்கும் கனவுகளின் அடிப்படையில், உன்னத செயல்களை ஆற்றுவதற்குரிய துணிவையும், கனவு காணும் திறமையையும், புனித யோசேப்பு, இளையோருக்கு வழங்குவாராக" என்ற செய்தியை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் டுவிட்டர் பக்கத்தில், இத்திங்களன்று வெளியிட்டார்.

மே மாதத்தின் முதல் நாள், இத்திங்களன்று, உழைப்பாளரான புனித யோசேப்பு திருநாள் சிறப்பிக்கப்பட்ட தருணத்தையொட்டியும், கனவில் தோன்றிய வானதூதரின் கட்டளைகளை, புனித யோசேப்பு செயலாற்றியவர் என்பதை நினைவுறுத்தும் வகையிலும், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

மேலும், "பாவம், சாவு ஆகிய அடிமைத் தளைகளிலிருந்து, இயேசு கிறிஸ்து தன் உயிர்ப்பினால், நம்மை விடுவித்து, நித்திய வாழ்வின் வழியைத் திறந்துள்ளார்" என்ற சொற்களை, தன் டுவிட்டர் செய்தியாக, ஏப்ரல் 30, இஞ்ஞாயிறன்று திருத்தந்தை வெளியிட்டிருந்தார்.

@Pontifex என்ற முகவரியில், ஒவ்வொரு நாளும் 9 மொழிகளில் திருத்தந்தை வழங்கிவரும் செய்திகள், மே 1ம் தேதி, 1,180 என்ற எண்ணிக்கையை அடைந்துள்ளது என்பதும், அவரது செய்திகளை ஆர்வமாய்த் தொடர்வோரின் எண்ணிக்கை, 1,06,00,000 ஆக உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.