2017-05-08 16:27:00

இறைவனின் ஆச்சரியங்களுக்கு திறந்த மனம் கொண்டிருக்க அழைப்பு


மே,08,2017. தூய ஆவியாரே திரு அவையையும், கிறிஸ்தவ சமுதாயத்தையும் வழிநடத்திச் செல்கிறார் என்றும், இறைவன் வழங்கும் ஆச்சரியங்களுக்கு திறந்த மனம் கொண்டவர்களாக கிறிஸ்தவர்கள் செயல்படவேண்டுமென்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இத்திங்களன்று காலை திருப்பலி நிறைவேற்றி, மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நம்மோடு என்றும் நடைபோடும் நம் இறைவன், ஒவ்வொரு நாளும் தன் படைப்புத் தொழில் வழியே நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்திக்கொண்டிருக்கிறார் என்று கூறினார்.

தூய ஆவியார் செயலாற்றுவதற்கு நம் மனங்களைத் திறக்காமல் இருப்பது, நம் சுதந்திரத்தையும், மகிழ்வையும் அழிவுக்குள்ளாக்குவது மட்டுமல்ல, மாறாக, திருஅவையை முன்னோக்கி அழைத்துச் செல்லும் தூய ஆவியார் மீது நமக்குள்ள விசுவாசத்தையும் அழித்துவிடுகிறது என்று, திருத்தந்தை, தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

கிறிஸ்தவர்களாகிய நம் ஒவ்வொருவருக்கும், நன்மை, தீமையைப் பகுத்தறியும் ஆற்றல் உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பகுத்தறியும் அருளை நாம் மூடி வைக்காமலும், நம் இதயங்களை மூடி வைக்காமலும் செயல்பட இறைவனிடம் மன்றாடுவோம் என்று தன் மறையுரையில் கேட்டுக்கொண்டார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.