2017-05-10 16:31:00

புனிதர்கள் பேதுரு, மாற்கு திருப்பீடங்களின் ஆன்மீகப் பிணைப்பு


மே,10,2017. புனித பேதுருவின் திருப்பீடமும், புனித மாற்குவின் திருப்பீடமும் ஆன்மீக அளவில் பிணைக்கப்பட்டுள்ளதற்கு தான் மகிழ்வுடன் நன்றி தெரிவிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அலெக்சாந்திரியா முதுபெரும் தந்தைக்கு அனுப்பியுள்ள ஒரு மடலில் கூறியுள்ளார்.

எகிப்து காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையின் திருத்தந்தையாக பணியாற்றும் 2ம் தவாத்ரோஸ் அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மே 10, இப்புதனன்று அனுப்பியுள்ள இம்மடலில், காப்டிக் திருத்தந்தை அவர்கள், 2013ம் ஆண்டு, மே மாதம் 10ம் தேதி தன்னைச் சந்திக்க வத்திக்கானுக்கு வருகை தந்ததை சிறப்பாக நினைவுகூர்ந்துள்ளார்.

தான் அண்மையில் எகிப்து நாட்டில் மேற்கொண்ட பயணத்தின்போது, திருத்தந்தை 2ம் தவாத்ரோஸ் அவர்கள் வழங்கிய வரவேற்பிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி கூறுவதாகவும், காப்டிக் ஆர்த்தடாக்ஸ் சபையும், கத்தோலிக்க திருஅவையும் திருமுழுக்கில் இணைந்து வருவதற்கு ஏற்ப, தங்களுக்குள் உருவான ஒப்பந்தம் குறித்து தான் இறைவனுக்கு நன்றி சொல்வதாகவும், திருத்தந்தை இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

தங்கள் ஒன்றிப்பு முயற்சிகளுக்கு, கிறிஸ்தவ மறைசாட்சிகளின் பரிந்துரைகளும், எடுத்துக்காட்டான வாழ்வும் உதவியாக உள்ளன என்று கூறும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் மடல், இவ்விரு சபைகளும், நற்கருணை விருந்தில் இணையும் நாளை நோக்கி முயற்சிகள் மேற்கொள்வோம் என்ற விருப்பத்தையும் வெளியிட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.