2017-05-12 16:40:00

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நகரில் பாத்திமா அன்னை உருவம்


மே,12,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாத்திமா திருத்தலத்தில், மே 13, இச்சனிக்கிழமை திருப்பலி நிறைவேற்றும் அதே வேளையில், இத்தாலியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அமாதிரிச்சேயில் (Amatrice) திருப்பலி நிகழும் என்றும், அவ்வேளையில், திருத்தந்தையால் அர்ச்சிக்கப்பட்ட பாத்திமா அன்னையின் திரு உருவம் அங்கு நிறுவப்படும் என்றும், இத்தாலியின் பிறரன்பு அமைப்பொன்று அறிவித்துள்ளது.

லூர்து திருத்தலம் உட்பட, உலகெங்கிலுமுள்ள கத்தோலிக்கத் திருத்தலங்களுக்குச் செல்ல விழையும் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகள் செய்யும் UNITALSI அமைப்பைச் சார்ந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இத்திருப்பலியை, ரியேத்தி ஆயர், தொமினிக்கோ பொம்பில்லி அவர்கள் நிறைவேற்றுகிறார்.

பாத்திமா அன்னையின் திரு உருவம் அமாதிரிச்சே பகுதியின் ரெயினா நகர் வழியே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, பின்னர், திருப்பலி நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், UNITALSI அமைப்பினர் அந்நகரில் அமைத்துள்ள மாற்றுத் திறனாளிகள் இல்லம் ஒன்றின் திறவுகோல், அமாதிரிச்சே மேயர், செர்ஜியோ பிரோஸ்ஸி அவர்களிடம், இச்சனிக்கிழமை, அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.