2017-05-12 16:27:00

மே 12ம் தேதி, அனைத்துலக செவிலியர் நாள்


மே,12,2017. 1820ம் ஆண்டு, மே 12ம் தேதி, பிளாரன்ஸ் நைட்டிங்கேல் (Florence Nightingale) அம்மையார் பிறந்ததை நினைவுகூரும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் மே 12ம் தேதி, அனைத்துலக செவிலியர் நாள் (International Nurses Day)  சிறப்பிக்கப்படுகிறது.

இவ்வெள்ளியன்று சிறப்பிக்கப்படும் உலகச் செவிலியர் நாளுக்கென,  "வழிநடத்திச் செல்லும் குரல் - நீடித்து நிலைக்கக்கூடிய இலக்குகளை அடைதல்" என்ற கருத்தை,  உலக நலவாழ்வு நிறுவனமான WHO தெரிவு செய்துள்ளது.

துவக்கத்தில் செவிலியரின் சேவை, மதிப்புமிக்கப் பணியாகக் கருதப்படவில்லையெனினும், நாளடைவில், விழிப்புணர்வு காரணமாக, செவிலியர்கள் மீது மரியாதை உருவாகியிருக்கிறது. இருப்பினும், மருத்துவர்களுக்கும் நோயாளிகளுக்கும் இடையே பாலமாக இருக்கும் அவர்களுடைய பணிகளுக்கு, தகுந்த அங்கீகாரம் கிடைக்கவில்லையென தமிழ்நாடு செவிலியர்கள் சங்க மாநிலச் செயலாளர் லீலா அவர்கள் கூறியுள்ளார்.

‘கிராமப்புறங்களில் செவிலியர்களின் சேவை நிரந்தரத் தேவையாக உள்ளபோதும், தமிழகம் முழுவதுமுள்ள 2,000த்திற்கும் அதிகமான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பல ஆண்டுகளாக, நிரந்தரச் செவிலியர் பணியிடங்களை, தமிழக அரசு தோற்றுவிக்கவில்லை என்று லீலா அவர்கள் கூறினார்.

அண்மையில் ஓர் இளம் நடிகர் செவிலியர் வேடமிட்டு நடித்துள்ளதைப் பற்றி குறிப்பிட்டுப் பேசிய, தமிழ்நாடு ஒப்பந்தச் செவிலியர்கள் சங்கத் தலைவர் மாரிமுத்து அவர்கள், மருத்துவமனையின் முதுகெலும்பாக உள்ள செவிலியர்களை இழிவுப்படுத்தும் வகையில் திரைப்படங்களில் காட்சி அமைக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்று கூறினார்.

ஆதாரம் : WHO / தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.