2017-05-15 16:19:00

பாசமுள்ள பார்வையில்.. தொலைக்கக் கூடாத பொக்கிஷம்


முதியோர் இல்லம் ஒன்றில் சேர்க்கப்பட்ட தாய் ஒருவர் இவ்வாறு சொல்கிறார். எனக்கு இப்போது வயது அறுபத்தெட்டு. எனக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், ஒரு பெண் பிள்ளையும் உள்ளனர். என் மகன்கள் மூவரும் எப்போதும் நல்லவர்கள். ஆளுக்கொரு மாதம் என, என்னை அவர்கள் வீட்டில் வைத்து உணவு கொடுத்தார்கள். இப்போது நான் அவர்கள் மனைவிகளுக்குச் சுமையென இங்கே என்னை விட்டுவிட்டார்கள். என் மகன்கள் கொடுமைக்காரர்கள் என்றால், என்னை இதற்கு முன்பே கொலை செய்திருப்பார்கள் அல்லவா? பிள்ளைகள் எனக்கு ஒருபோதும் பெரும் பாரமாக இருந்ததில்லை. நான்தான் அவர்களுக்குப் பெரும் பாரமாகி விட்டேன். இந்தத் தள்ளாத வயதிலும், என் இதயத்தில் தூளிகட்டி, அவர்களுக்கு இன்னும் தாலாட்டுப் பாடுகின்றேன். என் பிள்ளைகளைத் திட்டாதீர்கள். ஏனென்றால், அவர்கள், தன் பிள்ளைகளால் நாளைக்கு இங்கு வரக்கூடாது. போ என, என்னைப் புறந்தள்ளி விட்டாலும், உள்ளத்தில் என்றும் நான் அவர்களை உட்கார வைத்திருப்பேன். நான் பெற்ற பிள்ளைகள் நலமோடு இருக்கட்டும். நான் எதிர்கொண்ட தொல்லைகளை, என் மகன்கள் அனுபவிக்காமல் வாழட்டும்.

உனது மனைவி உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்டவர், ஆனால் உன் அன்னையோ கடவுளால் உனக்களிக்கப்பட்ட அரியதொரு பரிசு. எனவே விரும்பித் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்காக, பொக்கிஷமான தாயைத் தொலைத்து விடாதே. இது பெரியோர் அறிவுரை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.