2017-05-15 17:18:00

முற்சார்பு எண்ணங்களுடன் இணைந்து நடைபோட முடியாது


மே,15,2017. அமெரிக்க புதிய அதிபரை சந்திக்க உள்ளது, புனித பத்தாம் பயஸ் அமைப்பு, Medjugorjeயில் அன்னை மரியின் காட்சிகள் போன்றவை குறித்து கடந்த சனிக்கிழமை இரவு விமானப்பயணத்தில் பத்திரிகையாளர்களிடம் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

பாத்திமா நகரில் தன் திருப்பயணத்தை முடித்து, உரோம் நகருக்குத் திரும்பும் வழியில், விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் கருத்துக்களை மனம் திறந்த விதத்தில் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டின் புதிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களுடன் இடம்பெறவுள்ள சந்திப்பு குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டக் கேள்விக்குப் பதிலளித்த திருத்தந்தை, தான் எவரைக் குறித்தும் முற்சார்பு எண்ணங்களை  கொண்டிருப்பதில்லை எனவும், மற்றவரை மதித்து அவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து அவர்களுடன் இணைந்து நடப்பதையே தான் விரும்புவதாகவும் கூறினார்.

திருஅவையிலிருந்து பிரிந்துசென்று, தற்போது ஒன்றிணைய நெருங்கிவரும் புனித பத்தாம் பயஸ் அமைப்பின் நிலை குறித்தும் திருத்தந்தையிடம் கேள்வி ஒன்று முன்வைக்கப்பட்டது.

இந்த இணைப்பு முயற்சி சகோதரத்துவ உறவுடன் முன்னோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகவும்,  இதில் யார் வெல்வார், யார் தோல்வியடைவார் என்ற கேள்வியில்லை, மாறாக, ஒன்றிணைந்து நடந்து, ஒத்துழைப்பின் பாதையை கண்டுகொள்வதே முக்கியம் என்றார் திருத்தந்தை.

Medjugorje நகரில் இடம்பெறுவதாக அறிவிக்கப்படும் மரியன்னை காட்சிகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கும் தன் பதிலை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமிக்கப்பட்ட வல்லுனர்கள் குழு தயாரித்துள்ள ஆய்வின் அடிப்படையில், தன் தனிப்பட்ட கருத்துக்களை வழங்குவதாகக் கூறினார் திருத்தந்தை.

Medjugorje, காட்சிகள் குறித்த ஆய்வுகள் இன்னும் திருஅவையால் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், இந்த விமானப்பயணத்தின்போது பத்திரிகையாளர்களிடம் மேலும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.