2017-05-17 15:34:00

ஒவ்வொரு நாளும் 3000 வளர் இளம் பருவத்தினர் மரணம்


மே,17,2017. ஒவ்வொரு நாளும் 3000 பேர் என்ற அளவில், ஒவ்வோர் ஆண்டும், 12 இலட்சம் வளர் இளம் பருவத்தினர் கொல்லப்படுவதை நாம் எளிதில் தடுக்கமுடியும் என்று, WHO எனப்படும் உலக நலவாழ்வு நிறுவனம் அறிவித்துள்ளது.

வளர் இளம் பருவத்தினரின் மரணங்களுக்கு முக்கிய காரணிகளாக, போக்குவரத்து விபத்துக்களும், சுவாசத் தொடர்பான குறைபாடுகளும் உள்ளன என்று WHO அறிக்கை கூறுகிறது.

10 முதல் 19 வயதுக்குட்பட்ட ஆண் பாலின வளர் இளம் பருவத்தினரில், 1,15,000 பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர் என்று கூறும் இவ்வறிக்கை, பெண் பாலின வளர் இளம் பருவத்தினரின் மரணத்திற்கு, சுவாசத் தொடர்பான குறைபாடுகள் முக்கியமான காரணி என்று கூறியுள்ளது.

மாசடைந்த சுற்றுச்சூழல், மற்றும் கலப்படமான எரிபொருள்களைப் பயன்படுத்துவதால், வீட்டுக்குள் உருவாக்கும் நச்சுப்புகை, சுவாசத் தொடர்பான குறைபாடுகளுக்கு காரணம் என்றும், இந்த மரணங்களில் பெரும்பாலானவை, நடுத்தர அல்லது வறிய வருமானம் உள்ள நாடுகளில் அதிகம் ஏற்படுகின்றன என்றும் WHO அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

சுற்றுச்சூழல் மற்றும் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு உருவாக்கப்பட்டால், வளர் இளம் பருவத்தினரை ஆயிரக்கணக்கில் நாம் காப்பாற்ற முடியும் என்று, WHO துணை இயக்குனர் Flavia Bustreo அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.