2017-05-17 15:49:00

பாங்கி கர்தினாலின் கோரிக்கையை ஏற்ற போராளிகள்


மே,17,2017. மத்திய ஆப்ரிக்கக் குடியரசின் பாங்கியில் பேராயராகப் பணியாற்றும் கர்தினால் Dieudonné Nzapalainga அவர்களின் கோரிக்கையை ஏற்று, Bangassou நகரைவிட்டு, போராளிகள் வெளியேறி வருகின்றனர் என்று, பீதேஸ் (Fides) செய்தி கூறியுள்ளது.

போராளிகளுக்கும், அரசுக்கும் இடையே சமரச முயற்சிகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்ட குழுவின் தலைவராகப் பொறுப்பேற்றுள்ள கர்தினால் Nzapalainga அவர்கள் கேட்டுக்கொண்டதன்பேரில், அப்பகுதியில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான போராளிகள் வெளியேறி வருகின்றனர்.

Bangassou நகரில், அண்மைய வாரங்களில் ஏற்பட்ட வன்முறைகளைத் தொடர்ந்து, அங்கு வாழ்ந்துவந்த 1,500க்கும் மேற்பட்டோர், கத்தோலிக்கக் கோவில்களிலும்,  1000 பேர் மசூதியிலும், இன்னும் 3000 பேர் நகரைவிட்டு வெளியேறி, காங்கோ குடியரசிலும் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறியுள்ளது.

மசூதியில் தங்கியிருந்த மக்களுக்கு, குறிப்பாக, இஸ்லாமியருக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கத்துடன், Bangassou மறைமாவட்ட ஆயர் Juan José Aguirre Muños அவர்கள் தன் உயிரைப் பணயம் வைத்தார் என்று பீதேஸ் செய்தி மேலும் கூறியுள்ளது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.