2017-05-18 11:40:00

பாசமுள்ள பார்வையில்.. எதிர்பார்ப்பு இல்லாதது தாயன்பு


ஒரு நிறுவனத்தின் தலைவர் ஒருமுறை விளம்பரம் ஒன்றை வெளியிட்டார். வேலையின்றி இருப்பவர்கள் யாரானாலும் விண்ணப்பிக்கலாம், இதற்கு வயது வரம்போ, கல்வித் தகுதியோ கிடையாது என, அவர் விளம்பரம் கொடுத்திருந்தார். இதை வாசித்த பலர், குறிப்பிட்ட தேதியில், குறிப்பிட்ட நேரத்திற்கு, அந்த நிறுவனத்திற்கு வந்தனர். நிறுவனத் தலைவர், எல்லாரும் கூடியிருந்த இடத்தில் நடுவில் வந்து அமர்ந்தார். நேர்முகத் தேர்வுக்கு ஒவ்வொருவரையும் தனித்தனியே அழைப்பார் என எதிர்பார்த்துச் சென்றவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. அவர் கேள்விகளை ஆரம்பித்தார். உங்களில் இருபத்திநான்கு மணி நேரமும் ஓய்வின்றி வேலை செய்ய யாரும் தயாராக இருக்கின்றீர்களா? என்று அவர் கேட்டார். அங்கே நிசப்தம் நிலவியது. சிறிதுநேர அமைதிக்குப் பின், ஓர் இளைஞர் எழுந்து, நல்ல சம்பளமா சார்? மாதச் சம்பளமா? அல்லது நாள் கூலியா? என்று கேட்டார். தம்பி, இந்த வேலைக்கு கூலியே கிடையாது என்றார் தலைவர். சரி, வார விடுமுறை, மாத விடுமுறை, நோய்க்கு விடுப்பு.. இப்படி ஏதேனும் உண்டா? சார் என மீண்டும் கேட்டார் இளைஞர். அதுவும் கிடையாது என்றார் அவர். சாப்பாடு கிடைக்குமா சார் ? என்று கேட்டதற்கு, அதுவுமே சந்தேகம்தான் என்றார் அவர். சார், இந்த வேலைக்கு எப்படி.. என இழுத்தார் அந்த இளைஞர். அங்கு வந்திருந்த எல்லாருமே அந்த இளைஞர் சொல்வது சரி என்பதுபோல் தலையசைத்தனர். உடனே அந்நிறுவனத் தலைவர், ஐயாமாரே, தம்பிகளே, பிரதிபலன் பாராமல், இருபத்திநான்கு மணி நேரமும், ஓய்வின்றி, ஊதியமின்றி, வேலை செய்பவர், நம் ஒவ்வொருவரின் தாய்தான். தனது உடல்சுகம், பசி, விருப்பம் என எதையும் எதிர்பாராமல் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகத் தன்னையே மெழுகுதிரியாய் அர்ப்பணிப்பவர் அன்னை எனச் சொன்னார். இவ்வாறு அவர் சொன்னதும் பலரின் கண்களிலிருந்து கண்ணீர்.

எதையும் எதிர்பாராமல் தன்னையே தகனமாக்குவது தாயன்பு

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.