மே,20,2017. “நீதி, ஒருங்கிணைந்த மனித முன்னேற்றம், மனித உரிமைகளை மதித்தல், படைப்பைப் பாதுகாத்தல் ஆகியவற்றின் மீது, அமைதி கட்டியெழுப்பப்பட வேண்டும்” என்ற வார்த்தைகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தில் இச்சனிக்கிழமையன்று வெளியிடப்பட்டன.
மேலும், COMECE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின், ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு ஏற்பாடு செய்யும் கூட்டம் ஒன்றில், இக்கால மற்றும் வருங்கால ஐரோப்பா என்பது பற்றி உரையாற்றுவதற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைக்கப்பட்டுள்ளார்.
“ஐரோப்பா குறித்து மீண்டும் சிந்தித்துப் பார்த்தல்” என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 27ம் தேதி முதல் 29ம் தேதி வரை, COMECE குழு, உரோம் நகரில் நடத்தவுள்ள கூட்டத்தில் உரையாற்றுவதற்கு, திருத்தந்தை அழைக்கப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியம் உருவாவதற்கு அடித்தளமிட்ட, உரோம் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டதன் அறுபதாம் ஆண்டை முன்னிட்டு, திருப்பீடத்தின் ஒத்துழைப்புடன், COMECE குழு இக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
COMECE குழுவின் தலைவர் கர்தினால் Reinhard Marx அவர்கள் தலைமையில், இக்குழுவின் நிர்வாகக் குழுவினர், இவ்வாரத்தில் திருத்தந்தையைச் சந்தித்தவேளையில், திருத்தந்தை, இக்கூட்டத்தில் உரையாற்றுவதற்கு கேட்டுக்கொண்டனர்.
ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |