2017-05-23 15:26:00

பாசமுள்ள பார்வையில்: "கிறிஸ்தவர்களின் உதவியாகும் மரியா"


மே 24ம் தேதி, சகாய அன்னையின் திருநாளைக் கொண்டாடுகிறோம். சகாய மாதா, சகாயத்தாய் என்று சுருக்கமாக வழங்கப்படும் இந்த அடைமொழியின் விரிவான விளக்கம், "கிறிஸ்தவர்களின் உதவியாகும் மரியா" (Mary, Help of Christians) என்பதே.

முதல் நூற்றாண்டிலிருந்தே, கிறிஸ்தவ சமுதாயத்தில், அன்னை மரியாவுக்கு, இரு அடைமொழிகள் வழங்கப்பட்டு வந்தன. 'மரியா, இறைவனின் தாய்' என்பதும், 'மரியா, உதவி செய்பவர்' என்பதும் அவ்விரு அடைமொழிகள்.

4ம் நூற்றாண்டில் வாழ்ந்த, புனித ஜான் கிறிசோஸ்தம் அவர்கள், தன் மறையுரைகளில், மரியன்னையை, உதவி செய்பவராக அறிமுகப்படுத்தி, அதை ஒரு பக்தி முயற்சியாக வளர்த்தார்.

16ம் நூற்றாண்டில், ஐரோப்பிய கிறிஸ்தவ சமுதாயத்தை, இஸ்லாமியப் படையெடுப்பிலிருந்து காப்பாற்ற, சகாயத்தாயின் உதவிகேட்டு, மக்கள் செபிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டார், திருத்தந்தை 5ம் பத்திநாதர். அவ்வேளையில் கிடைத்த வெற்றியும், பாதுகாப்பும், மரியன்னையின் பரிந்துரையால் கிடைத்தன என்பதை, மக்கள் நன்கு உணர்ந்திருந்தனர்.

19ம் நூற்றாண்டில், திருத்தந்தை 7ம் பத்திநாதர் அவர்கள், மன்னன் நெப்போலியானால் கைது செய்யப்பட்டு, பின்னர், விடுவிக்கப்பட்டார். தன் விடுதலைக்கும், திருஅவையின் பாதுகாப்பிற்கும் உதவி செய்தவர் அன்னை மரியா என்று கூறிய திருத்தந்தை 7ம் பத்திநாதர், தான் விடுதலையடைந்த மே 24ம் தேதியை, சகாயத்தாயின் திருநாளாக உருவாக்கினார்.

இத்தாலியின் தூரின் நகரில் உள்ள பசிலிக்காவில், 'கிறிஸ்தவர்களின் உதவியான மரியா' மகுடம் சூட்டப்பட்டு, பீடமேற்றப்பட்டுள்ளார். புனித தொன் போஸ்கோவால் பிரபலமாக்கப்பட்ட சகாயத்தாயின் பக்தி முயற்சி, சலேசிய சபைத் துறவிகளால் இன்று வளர்க்கப்பட்டு வருகிறது.

இதே மே 24ம் தேதி, இயேசுசபையினர், ‘வழித்துணையாகும் நமது அன்னை’ என்று போருள்படும், ‘Madonna Della Strada’ திருநாளைக் கொண்டாடுகின்றனர்.

கிறிஸ்தவ சமுதாயம், அன்னை மரியாவை, 'இறைவனின் தாய்' என்றும், 'உதவி செய்பவர்' என்றும் ‘வழித்துணையாகும் நமது அன்னை’ என்றும் கொண்டாடுவதில், ஆச்சரியம் எதுவுமில்லையே!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.