2017-05-25 15:47:00

பாசமுள்ள பார்வையில்.. சிக்கல்கள் தீர்க்கும் அன்னை மரியா


புனித இரேனியுஸ் அவர்கள்(கி.பி.125-202), லியோன் ஆயராகப் பணியாற்றி, 202ம் ஆண்டில், மறைசாட்சி மரணம் அடைந்தவர். இவர், அன்னை மரியா பற்றி தியானிக்கையில், மனிதகுலத்தின் முதல் பெண் ஏவாளையும், அன்னை மரியாவையும் ஒப்பிட்டு இவ்வாறு சொல்லியிருக்கிறார். ஏவாள், தனது கீழ்ப்படியாமையால், மனிதகுலத்திற்கு வீழ்ச்சியைக் கொணர்ந்த முடிச்சைப் போட்டார். மாறாக, மரியா, தனது கீழ்ப்படிதலால், அந்த முடிச்சை அவிழ்த்துவிட்டார். இந்தச் சிந்தனையை அடிப்படையாக வைத்து, ஜெர்மன் நாட்டின் பவேரியா மாநிலத்தில் வாழ்ந்த Johann Georg Melchior Schmidtner (1625-1707) என்ற ஓவியர், ஏறக்குறைய 1700ம் ஆண்டில், அன்னை மரியா திருவுருவம் ஒன்றை வரைந்தார். மரியா, வானதூதர்கள் புடைசூழ, பிறைநிலவின்மேல் நிற்பதுபோலவும், அவரின் தலைமீதுள்ள வட்டவடிவ விண்மீன்கள் மகுடத்திற்குமேல், தூய ஆவியார் புறா வடிவில் அசைந்தாடுவது போலவும், அவர் நீளக்கயிற்றிலுள்ள முடிச்சுகளை கைகளால் அவிழ்ப்பது போலவும், அக்கயிறுகளை தூதர்கள் தாங்கியிருப்பது போலவும், அதேநேரம், மரியாவின் பாதங்களில் முடிச்சுகள்போன்று பின்னிச் சுருண்டு கிடக்கும் பாம்பை மிதிப்பது போலவும் வரைந்தார். இதற்கிடையே, ஓவியர் Johann Georg அவர்களின் தாத்தாவான Wolfgang Langenmantel(1586-1637), தனது மனைவி Sophia Rentz (1590-1649) அவருடன் மனவருத்தம் ஏற்பட்டு அவரைவிட்டுப் பிரியும் நிலையில் இருந்தார். அச்சமயத்தில், Wolfgang அவர்கள், Ingolstadt நகரிலிருந்த இயேசு சபை அருள்பணியாளர் Jakob Rem அவர்களின் உதவியை நாடினார். அந்த அருள்பணியாளர் அன்னை மரியாவிடம், அம்மா மரியே, இத்தம்பதியரில் உருவாகியுள்ள திருமண உறவின் அனைத்துச் சிக்கல்களையும் தீர்த்தருளும் என உருக்கமாகச் செபித்தார். உடனடியாக, அந்தத் தம்பதியர்க்கிடையே சமாதானம் நிலவியது. அதன்பின், அவர்களின் திருமண உறவில் பிரச்சனையே ஏற்படவில்லை. இந்தப் புதுமையின் நினைவாக,  ஓவியர் Johann Georg அவர்கள், தான் வரைந்த ஓவியத்தை, Augsburg நகரிலுள்ள புனித பேதுரு துறவு ஆதீனத்திற்கு நன்கொடையாக அளித்தார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஜெர்மனியில் கல்வி பயின்றபோது இந்த ஓவியத்தைப் பார்த்து, அந்த அன்னை மரியா பக்தியை தனது அர்ஜென்டீனா நாட்டில் பரப்பினார். அன்னை மரியா சிக்கல்களைத் தீர்ப்பவர், துன்பம் என்னும் முடிச்சுக்களை அவிழ்ப்பவர் என்ற பெயரில் இந்த அன்னை மரியா பக்தி, தற்போது உலகின் பல நாடுகளில் பரவியுள்ளது.

ஒவ்வொரு நாளும், தீர்வுகளைக் காண முடியாமல் எத்தனையோ பிரச்சனைகளையும்,  போராட்டங்களையும் நாம் வாழ்வில் சந்திக்கிறோம். இந்தப் பிரச்சனைகளாகிய முடிச்சுகளை அன்னை மரியாவிடம் அர்ப்பணிப்போம். அத்தாய் அம்முடிச்சுகளை அவிழ்த்து வைப்பார், தீர்க்க முடியாத நம் சிக்கல்களைத் தீர்த்து வைப்பார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.