2017-05-25 15:59:00

விண்ணேற்புச் செய்தியை வாழ்வில் எடுத்துச் செல்வோம்


மே,25,2017. 'விண்ணக மகிமைக்கு இறைவன் ஏறிச் சென்றதில், இறைவனோடு இணைந்த முழு வாழ்வில் நாமும் பங்கு பெறுகிறோம். இதனை நாம், நம் தினசரி வாழ்வில், நம் இதயங்களில் எடுத்துச் செல்வோம்' என, இவ்வியாழனன்று தன் டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசு உயிர்த்தெழுந்த நாற்பதாம் நாளன்று சிறப்பிக்கப்படும் இயேசுவின் விண்ணேற்பு நாளையொட்டி இச்செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இதற்கிடையே, வரும் சனிக்கிழமையன்று இத்தாலியின் ஜெனோவா நகருக்கு திருப்பயணம் மேற்கொள்ள உள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் மாலை அந்நகரின் Giannina Gaslini குழந்தைகள் நல மருத்துவமனை சிறார்களுடன் தொலைபேசி வழி உரையாடினார்.

ஜெனோவாவின் கத்தோலிக்க பங்குத்தள வானொலி ஒன்றின் மூலமாக தன் செய்தியை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று அவர்களை நேரில் சந்திக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

'அருள் நிறை மரியே' செபத்தை சிறார்களுடன் இணைந்து செபித்த திருத்தந்தை, வானொலி வழியாக தன் ஆசீரையும் அளித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.