2017-05-29 15:53:00

தூய ஆவியானவர் நமக்குள் இயங்க அனுமதிப்போம்


மே,29,2017. எந்த ஒரு தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன்னால், தூய ஆவியானவரை நம்  மனதிற்குள் நுழைய அனுமதித்து, அவர் குரலுக்கு செவிமடுக்கப் பழகுவோம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தின் சிற்றாலயத்தில் இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கிய திருத்தந்தை, வரும் ஞாயிறு சிறப்பிக்கப்படவிருக்கும் தூய ஆவியார் பெருவிழாவை மையமாக வைத்து, தன் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.

நம் இதயங்களை, நன்மையை நோக்கித் திருப்புபவராகவும், நமக்குத் தூண்டுதல் அளிப்பவராகவும், நம் உள்ளுணர்வுகளைத் தட்டியெழுப்புபவராகவும் இருக்கும் தூய ஆவியானவர், நம் இதயங்களிலும், பங்குத்தளங்களிலும், சமூகங்களிலும் குடிவரவேண்டும் என செபிப்போம் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.

நம் வாழ்வில் தூய ஆவியானவருக்கு நாம் எந்த இடத்தைக் கொடுத்துள்ளோம் என்பதைக் குறித்து நாம் சிந்திக்க வேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை, தூய ஆவியாரின் ஆலோசனைகளுக்கு செவிமடுக்காமல், வெறும் கொள்கையளவில் தொடரும் விசுவாசம் என்பது, கதகதப்பில்லாத குளிர்நிலை விசுவாசமாக மாறிவிடும் ஆபத்தையும் சுட்டிக்காட்டினார்.

எல்லாச் சட்டங்களையும் தெளிவாகப் படித்திருந்தும், தங்கள் இதயங்களை இறுக்கமாக மூடிச் செயல்பட்ட அக்கால யூத மறைவல்லுனர்களைப்போல் மாறாமல் இருக்க வேண்டுமானால், தூய ஆவியாரை நமக்குள் இயங்க அனுமதிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.