2017-05-31 15:53:00

பாசமுள்ளப் பார்வையில்: கண்மூடித்தனமான பாசம் கண்டிக்கத்தக்கது


தன் குறும்புகளால் பலருக்கும் துன்பத்தைக் கொடுத்துக் கொண்டிருந்த தன் 10 வயது மகனை அழைத்துக்கொண்டு ஒரு ஞானியைப் பார்க்கச் சென்றார் தாய் ஒருவர். 'ஐயா இவனுக்கு ஏதாவது புத்திமதி சொல்லித் திருத்துங்கள். ஏனெனில், இவனின் குறும்புத்தனம் அதிகமாகிக் கொண்டேச் செல்கிறது' என புகார் செய்தார் அத்தாய். அச்சிறுவனை கூர்ந்துப் பார்த்த அந்த ஞானி, அவனிடம் விசிறியைக் கொடுத்து, சிறிது நேரம் தனக்கு வீசச் சொன்னார். சிறுவனும் வீசினான். அந்த இதமான காற்றில் சிறிது நேரத்தில் தூங்கிப் போனார் ஞானி. தன் மகனிடமிருந்து விசிறியை வாங்கி, தானே வீசத் துவங்கினார் தாய். சிறிது நேரத்தில் விழித்த அந்த ஞானி, தாய் விசிறிக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை நோக்கி, ' அம்மா, தாயன்பு, குழந்தைக்குத் தன்னம்பிக்கையை வளர்க்கவும் செய்யாது, கற்பிக்கவும் செய்யாது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டீர்களே’ என்று கூறினார். 'அவன் செயல்களை அவனையேச் செய்யவிடுங்கள். அவன் செய்ய வேண்டியவற்றை, பாசமிகுதியால் நீங்கள் செய்யும்போது, அவனுக்கு குறும்புகள் செய்ய நீங்களே நேரத்தை ஒதுக்கிக் கொடுக்கிறீர்கள். பாசம் தவறிழைப்பது இங்குதான்' என முடித்தார் ஞானி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.