ஊருக்கெல்லாம் ஆச்சரியமாக இருந்தது, எப்படி இந்தத் தாயால், மாற்றுத்திறனாளியாகப் பிறந்த மகனை கடந்த 32 ஆண்டுகளாக தூக்கிச் சுமந்து நடக்க முடிகிறது என்று. அத்தாய்க்கும் அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை. ‘இது விதி, வேறு வழியில்லை’ என்று அதனை அவள் ஏற்றுக் கொண்டதாகத் தெரியவில்லை. இன்று வரை உண்மையான பாசத்தோடும், புன்னகை முகத்துடனும்தான் அதனை ஏற்றுகொண்டு செயலாற்றுகிறார் அத்தாய். தன் மகன், இரு கால்களும் ஊனமாக பிறந்தவுடனேயே தன்னை விட்டு ஓடிவிட்ட தன் கணவனை எண்ணிப் பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொள்வாள். பிரச்னைகளை எதிர்நோக்க தைரியமின்றி இப்படியே ஓடிக்கொண்டிருந்தால், எங்குபோய் அது முடியும் என மனதிற்குள் நினைத்துச் சிரிப்பாள். மாற்றுத்திறனாளியாகப் பிறந்தாலும், தன் மகன் தன் மீது உயிரையே வைத்திருப்பது அவளுக்கு ஆறுதலாக இருந்தது. அடுத்த ஊர் திருவிழாவுக்கு தன் மகனுடன் சென்றபோதுதான் அந்த பெண்ணைப் பார்த்தாள் தாய். செவித்திறனின்றியும், வாய்ப் பேச முடியாமலும், அநாதையாக நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடனேயே அவளுக்குப் பிடித்துவிட்டது. தன் மகனுக்கு அப்பெண்ணை மணமுடித்துவைத்த அத்தாய், தனக்கு ஒரு மகளைத் தேடிக் கொண்டதாக ஊரெல்லாம் பெருமையடித்துக் கொண்டாள். ஒருவரிடம் இருக்கும் குறைபாடு இன்னொருவரால் நிறைவுச் செய்யப்படும்போது, கவலைப்பட அங்கு என்ன இருக்கிறது என, ஊரை வாயடைக்க வைத்தது அந்த பெத்த மனது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |