2017-06-05 15:49:00

வாரம் ஓர் அலசல் – அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கொண்டே..


ஜூன்,05,2017. முகநூல், வாட்சப், ஆன்ட்ராய்டு காலம் வந்ததுதான் தாமதம், மனிதரின் உறவுகளும், வாட்சப் மயமாக மாறி விட்டன. முன் கடந்து போவோரின் முகம் தெரியவில்லை. பின் நின்று சிரிப்போரின் எண்ணம் புரியவில்லை. தலை தாழ்ந்தே எங்கும் பயணம். தொடுதிரையை தொட்டபடி உள்ளங்கையில்தான் உலகம். மனைவியும், கணவரும் வீட்டுக்குள்ளே கைபேசியில். உற்றாரும் உறவினரும் Family  வாட்ஸ்சப்பில் குரூப்பில். சாமக் கோழி கூவிய பின்னும், கொக்கரக்கோ கேட்கும் முன்னும், வாட்சப்பில். பெற்ற பிள்ளை 'அப்பா' என்றழைக்கும்போதுகூட சுட்டெரிக்கும் பார்வை. ஆக, இந்த மாறிய உலகத்தில், உண்மையான, ஆழமான, எதார்த்தமான குடும்ப உறவுகளும், நட்பும், மெல்ல மெல்ல தூரமாகச் செல்வதை உணர முடிகின்றது. உலகம் இவ்வாறு சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில், ஒவ்வொரு நாளும் தினத்தாள்களில் தடித்த எழுத்துக்களில் நம் கண்களில் முதலில் தெரியும் செய்திகள் அச்சத்தையும், கவலையையுமே ஏற்படுத்துகின்றன. பிலிப்பைன்ஸ் நாட்டின் மராவி நகரில், புரட்சியாளர்களுக்கும், இராணுவத்திற்கும் இடையே இடம்பெறும் கடும் தாக்குதலில் அப்பாவி பொது மக்கள் கடும் இன்னலுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாலியின் தூரின் நகரில், இச்சனிக்கிழமை இரவு, ஒரு கால்பந்து போட்டியின் நேரலையை ஆயிரக்கணக்கான இரசிகர்கள் திரையில் பார்த்து கொண்டிருந்தபோது, கூட்ட நெரிசலில் 1500 பேர் காயமடைந்துள்ளனர். அப்போது பெரிய வெடி சப்தம் கேட்டதும், குண்டுவெடித்து விட்டதாக பரவிய வதந்ததியே இதற்குக் காரணம். ஈராக்கின் மொசூல் நகரில், ஐ.எஸ். இஸ்லாமிய அரசின் பிடியிலிருந்த பகுதி மக்கள் தப்பித்துச் செல்லும்போது சுடப்பட்டனர். இதில், பலர் கொல்லப்பட்டுள்ளனர்.

பிரிட்டனின் மான்செஸ்டர் நகரில் கடந்த மே 22ம் தேதியன்று,  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 22 பேர் கொல்லப்பட்டனர் மற்றும், பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலின் சுவடுகள் மறைவதற்குள், தலைநகர் இலண்டனில், இச்சனிக்கிழமை இரவில், பயங்கரவாதிகள் மீண்டும் ஒரு கொடூரத்தை அரங்கேற்றியுள்ளனர். இலண்டன் மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடிய வாகனம் ஒன்று, அப்பகுதியில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது அடுத்தடுத்து மோதியது. அடுத்த சில நிமிடங்களில், அந்த வாகனம், அங்கிருந்த சந்தைக்குள் சென்றது. உணவு விடுதிகள், மதுபான விடுதிகள் என,  மக்கள் கூட்டம் அதிகமுள்ள அந்தப் பகுதியில் வாகனம் சென்றவுடன், அதில் இருந்த பயங்கரவாதிகள் வெளியே குதித்து, அங்கு இருந்தவர்கள் மீது, கத்தியால் குத்தி சரமாரியாகத் தாக்குதல் நடத்தினர். இவ்விரு சம்பவங்களிலும், ஏழு பேர் கொல்லப்பட்டனர்; ஐம்பதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இஞ்ஞாயிறு அல்லேலூயா வாழ்த்தொலி செபத்திற்குப் பின், இலண்டன் தாக்குதலில் பலியானவர்கள் மற்றும், அவர்களின் குடும்பங்களுக்காகச் செபித்தார். தூய ஆவியார், உலகம் முழுவதற்கும் அமைதியை அருளுமாறும் அவர் மன்றாடினார்.

தூய ஆவியார் பெருவிழாவான இஞ்ஞாயிறு காலையில், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமர்ந்திருந்த பல்லாயிரக்கணக்கான விசுவாசிகளுக்குத் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றினார் திருத்தந்தை பிரான்சிஸ். புதிய மனிதர், புதிய காரியம் ஆகிய இரண்டையும் தூய ஆவியார் நமக்கு வழங்குகிறார், புதிய காரியம் என்பது, புதிய இதயம் என்றார் திருத்தந்தை. உயிர்பெற்றெழுந்த இயேசு, தம் சீடர்களுக்கு முதலில் தோன்றியபோது, “தூய ஆவியைப் பெற்றுக் கொள்ளுங்கள். எவருடைய பாவங்களை நீங்கள் மன்னிப்பீர்களோ, அவை மன்னிக்கப்படும். எவருடைய பாவங்களை மன்னியாதிருப்பீர்களோ, அவை மன்னிக்கப்படா”(யோவா.20:22-23) என்று சொன்னார். தம் பாடுகள், சிலுவை மரணத்தின்போது சீடர்கள் தம்மை மறுதலித்து, கைவிட்டுச் சென்றதற்கு, இயேசு அவர்களைக் கண்டிக்கவில்லை, மாறாக, அவர்களுக்கு மன்னிப்பின் ஆவியை வழங்கினார் என்றார் திருத்தந்தை. அவர் மேலும் சொன்னார்...

உயிர்பெற்றெழுந்த இயேசு வழங்கிய முதல் கொடை தூய ஆவியார். அனைத்திற்கும் மேலாக, பாவங்களுக்கு மன்னிப்பளிக்கும் அதிகாரத்தை அவர் அளித்தார். இங்கு திருஅவையின் தொடக்கத்தை நாம் பார்க்கிறோம். நம் அனைவரையும் ஒன்றாக வைத்திருக்கும் பசை, திருஅவை எனும் வீட்டின் செற்கற்களை இணைக்கும் சிமெண்ட், மன்னிப்பு. ஏனென்றால், மன்னிப்பு மிக உயரிய கொடை. இது ஒன்றிப்பைக் கட்டிக் காக்கின்றது. இது, வீழ்வதைத் தடுக்கின்றது.  ஒருங்கிணைக்கின்றது, மற்றும், வலுப்படுத்துகின்றது. மன்னிப்பு, நம் இதயங்களுக்கு விடுதலையளிக்கின்றது. எதையும் புதிதாகத் தொடங்கச் சக்தியளிக்கின்றது. மன்னிப்பு நம்பிக்கையளிக்கின்றது. எல்லாவற்றிலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்றது.  

நாம் புதிய இதயத்துடன், புதிய மனிதர்களாக வாழ்வதற்கு இறைவன் ஒவ்வொரு நாளும் நமக்கு அருளை வழங்கி வருகிறார். இந்தியாவில் இந்நாள்களில் அரசு வெளியிடும் சில தடை அறிக்கைகளை நோக்கும்போது, இவை, முக்கியமாக கவனம் செலுத்த வேண்டிய காரியங்களிலிருந்து மக்களை திசை திருப்பவோ என்ற அச்சமே ஏற்படுகிறது. நாட்டின் குடியரசுத் தலைவர் தேர்தல், கீழடி அகழ்வராய்ச்சி, பொருளாதார உற்பத்தியில் ஏற்படும் சரிவு, பல இலட்சம் வேலை இழப்புகள் போன்றவை பற்றி மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காகவோ என்ற கேள்வியை ஒருவர் எழுப்பியுள்ளார். ஓர் ஊரில், பெரியவர் ஒருவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி வேதநூலை வாசித்துக்கொண்டே இருப்பாராம். இதை எதிர்வீட்டு இளைஞன் பல நாட்களாக கவனித்துக் கொண்டே இருந்தான். ஒருநாள் அவரிடம், "தாத்தா! நீங்க எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே... இதை எத்தனை நாளா படிக்கிறீங்க?" என்று கேட்டான். பெரியவர் சொன்னார், "ஒரு முப்பது முப்பத்தஞ்சு வருஷம் இருக்கும் என்று. "அப்படின்னா இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே, அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறீங்க?" என்றான். தாத்தா சிரித்தபடி. தம்பி, நீ எனக்கு ஓர் உதவி செய். நீ அதைச் செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்" என்று கூறி, பக்கத்தில் இருந்த ஒரு மூங்கில் கூடையை எடுத்தார் பெரியவர். அதில் அடுப்புக் கரி இருந்தது. அதை ஒரு மூலையில் கொட்டினார். பல நாள்களாக அடுப்புக்கரியை சுமந்து சுமந்து அந்தக் கூடையின் உட்புறம் கருப்பாக மாறி இருந்தது. பெரியவர் சொன்னார், " தம்பி, அதோ இருக்குற குழாயில இருந்து இந்தக் கூடையில கொஞ்சம் தண்ணி பிடியேன். இளைஞனுக்கு சிரிப்பு வந்தது! இருந்தாலும் பெரியவர் சொல்லி விட்டதால், எடுத்துச் சென்று தண்ணீர் நிரப்பி எடுத்து வந்தான். அவன் வந்து சேருவதற்கு முன்பே, எல்லா நீரும் தரையில் ஒழுகிப் போனது. பெரியவர் சொன்னார், "இன்னும் ஒரு முறை. இளைஞன் மீண்டும் முயன்றான். மீண்டும் சிந்திப்போனது. தாத்தாவுக்காக இன்னும் ஒரே ஒரு முறை மட்டும் எனப் பெரியவர் கேட்டார். 

இளைஞன் ஒரு முடிவுக்கு வந்தான். இம்முறை மட்டும் அவர் சொல்கிறபடி செய்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் ஓடி விடுவோம். அவர் எந்தப் புத்தகத்தைப் படித்தால் எனக்கென்ன வந்தது? என்று தனக்குள்ளே அவன் சொல்லிக் கொண்டான். வழக்கம் போலவே எல்லாத் தண்ணீரும் தரையில்! "தாத்தா, இந்தாங்க உங்க கூடை. எதற்கு என்னை இந்தப் பாடு படுத்தினீர்கள்?" என்றான் அவன். பெரியவர் புன்னகையோடு,  இதில் தண்ணீர் நிற்காது என, எனக்கும் தெரியும். நீ முதலில் தண்ணீர் பிடிக்கப் போகும்போது இதன் உட்புறம், மிகவும் அழுக்குப் பிடித்து கருப்பாக இருந்தது, "இப்போது பார்", தண்ணீர் பட்டுப் பட்டுக் கூடையின் உட்புறம் சுத்தமாகி இருக்கிறது. தம்பி, நீ கேட்ட கேள்விக்கு பதில் இதுதான். எத்தனை முறை தண்ணீர் பிடித்தாலும் மூங்கில் கூடை நிரம்பவே இல்லை. ஆனாலும் ஒவ்வொரு முறையும் கூடை சுத்தமாகியது. அது போலத்தான் மனதும்! படிக்கிற ஒவ்வொரு முறையும் உள்ளத்திலிருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக் கொண்டே இருக்கும்" என்றார்.

நம் உள்ளத்தில் இருக்கும் அழுக்கும், கறையும் சுத்தமாகிக்கொண்டே இருந்தால்தான் வாழ்வும் சிறக்கும். திருத்தந்தை இஞ்ஞாயிறன்று கூறியதுபோன்று, இறைவன் நமக்கு வழங்கும் கொடைகளை உணர்ந்து அவற்றைப் பயன்படுத்த முயலுவோம். அன்றொருநாள் இடியும் மின்னலும் கண்ணையும் காதையும் அலறச் செய்தன. அதனால், அன்னை ஒருவர், தன் ஆறு வயது மகனை பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்றார். தன் மகன் பயந்து நடுங்குவான் என நினைத்து, திரும்பும் வழியில், மகனை இறுக அணைத்துக்கொண்டார் அன்னை. ஆனால் மகனோ, புன்முறுவலுடன், வானத்தில் மின்னலைப் பார்த்து இரசித்துக்கொண்டே வந்தான். மகனே, ஏன் இப்படி வானத்தைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே வருகிறாய் என்று கேட்டார் அன்னை. அதற்கு மகன், இல்லையம்மா, கடவுள் என்னைப் படமெடுத்துக் கொண்டிருக்கிறார், நான் நன்றாகத் தெரிய வேண்டுமல்லவா? என்று பதில் சொன்னான். ஆம். அறியாப் பருவத்தில் நமக்கு வாழ்க்கை எவ்வளவு எளிமையாக, அழகாகத் தெரிகிறது, ஆனால், வளர்ந்தபின், அதை நாம் சிக்கல் நிறைந்ததாக மாற்றி விடுகிறோம். நாம் மகிழ்வாக இருக்கும்போது நம் வாழ்வு நன்றாக விளங்கும். ஆனால் நம்மால் மற்ற மனிதர்கள் மகிழ்ச்சியாக இருக்கும்போது, நம் வாழ்வு மிகச் சிறப்பாக இருக்கும். ஆதலால், எப்போதும், மற்றவருக்கு ஒரு தூண்டுகோலாக இருப்போம், பிறர் மகிழ்வடைய நம் வாழ்வை மகிழ்ச்சியுள்ளதாக அமைப்போம். ஒரு நல்ல புன்முறுவல், நம் வாழ்வுக்கும், சுற்றியுள்ளவரின் வாழ்வுக்கும் சக்தியளிக்கும் சாதனம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.