2017-06-10 15:04:00

அனைத்தும் மாண்புடன் கூடியதாக இருத்தல் வேண்டும்


ஜூன்,10,2017. தன்னுடைய மூதாதையர்களும் இத்தாலியர்கள் என்ற வகையில், மனித, குடும்ப, மற்றும் பணி தொடர்புடைய மாண்புகளை மையமாகக் கொண்டுள்ள இத்தாலிய அரசியலமைப்பு குறித்து தான் மகிழ்வதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.

வத்திக்கான் நாட்டுத் தலைவர் என்ற முறையில், இச்சனிக்கிழமையன்று இத்தாலிய அரசுத்தலைவரைச் சந்திக்கச் சென்ற திருத்தந்தை, அரசு மாளிகையில் குழுமியிருந்தோருக்கு வழங்கிய உரையில், அடிப்படைவாதக் கொள்கைகளால் வளர்ச்சிபெற்றுள்ள அனைத்துலக பயங்கரவாதம் குறித்த கவலையை வெளியிட்டார்.

புகலிடம் தேடுவோரின் நிலை, வேலைவாய்ப்புக்கள் இல்லாமையால் குடும்பங்களும், குழந்தைகளும் பாதிக்கப்படுதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டாலும், தன் ஆன்மீக வளங்களின் உதவிகொண்டு இத்தாலி நாடு முன்னேற்றம் கண்டு வருவதையும் திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார்.

குடிபெயர்வோருக்கு உதவுவது மட்டுமல்ல, உலகப் பாதுகாப்பு, அமைதி, மற்றும் அனைத்துலக ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு இத்தாலி நாடு ஆற்றிவரும் சிறப்பு பங்களிப்பையும் பாராட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மாண்பு மிகுந்த வேலை வாய்ப்புக்களை உருவாக்க வேண்டியதன் தேவையை வலியுறுத்தினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.